போட்டியின்றி தேர்வான மகிழ்ச்சியில்.. பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு மாரடைப்பு.. மதுரையில் சோகம்
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் பஞ்சாயத்தில் போட்டியின்றி தேர்வான மகிழ்ச்சியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆனந்தன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஊரக பகுதிகளுக்கு வரும் 27 மற்றும் 30ம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி போட்டியிட விரும்புவோர் வேட்பு மனுதாக்கல் செய்தார். வேட்பு மனுதாக்கல் நிறைவுபெற்ற நிலையில் அன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் கருமாத்தூரில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் ஆனந்தன் (45). இவருக்கு மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவருக்கு சொந்த ஊர் திருமங்கலம் ஒன்றியம், பொன்னமங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வீரம்பட்டி கிராமம் ஆகும்.
ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம்.. சேலம் கடையில் அலைமோதிய மக்கள்
ஆனந்தன் பொன்னமங்கலம் பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து யாரும் மனு செய்யவில்லை. இதனால், ஆனந்தன் போட்டியின்றி பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தகவலறிந்த ஆனந்தன் மகிழ்ச்சியடைந்து பொன்னமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தார்.
பின்னர் அப்படியே அங்கிருந்து கருமாத்தூரில் உள்ள தனது கடைக்கு சென்று வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார் அப்போது திடீரென ஆனந்தனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கடையில் மயங்கி விழுந்தார்.அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆனந்தன் இறந்துவிட்டதாக கூறினர். போட்டியின்றி தேர்வான மகிழ்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் இறந்ததையொட்டி, அந்த வார்டில் தேர்தல் தள்ளிவைக்கப்பட உள்ளது.