"போய்வாடி அன்னக்கிளி" எருக்கம்பால் ஊற்றினோம்.. செத்துடுச்சு.. ஒரு மாத பெண் சிசுவை கொன்ற தாய் பகீர்
பெண் குழந்தையை எருக்கம்பாலை ஊற்றி கொன்றுள்ளனர்
மதுரை: "எருக்கம்பாலை தான் தந்தோம்.. குழந்தை செத்துடுச்சு.. யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு பக்கத்தில் குழியை தோண்டி புதைச்சிட்டோம்.. இந்த குழந்தையை வேற யாருக்கும் தரவும் எங்களுக்கு இஷ்டம் இல்லை" என்று ஒரு மாத சிசுவை கொன்ற தாய் சவுமியா வாக்குமூலம் தந்துள்ளார்.
மதுரை மாவட்டம், செக்கானூரணியை அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் வைரமுருகன்.. இவரது மனைவி சவுமியா.. வயது 24 ஆகிறது.
தங்கள் வீட்டு வாசல் முன்னாடியே பழக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.. இந்நிலையில், சவுமியாவுக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி, 2வதாக இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் தம்பதி 2 பேருமே விரக்தியடைந்தனர்.
குழந்தை
அதனால், கடந்த மார்ச் 2ம் தேதி இரவு, அந்த பெண் சிசு இறந்து விட்டதாக கூறி வீட்டு அருகிலேயே குழி தோண்டி புதைத்துள்ளனர்... மேலும் குழந்தை இறந்த விஷயத்தை சொந்தக்காரர்கள் யாரிடமும் இவர்கள் சொல்லவும் இல்லை. ஆனால் அக்கம்பக்கத்தினருக்கு இது பெருத்த சந்தேகமாகவே இருந்தது.
வேப்பமரம்
இதனையடுத்து செக்கானூரணி போலீசுக்கு விஷயம் தெரிவிக்கவும், விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான் வைரமுருகன் வீட்டின் அருகில் இருந்த வேப்பமரத்திற்கு கீழே பள்ளம்தோண்டி மூடியது போன்று தெரிந்தது.. அதனால் அந்த இடத்தை தோண்டினர்.. அப்போதுதான் புதைக்கப்பட்டிருந்த பெண் சிசு உடலை கண்டனர்.. அந்த சிசுவை மீட்ட போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பினர்.. குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொன்றது ரிப்போர்ட்டில் வந்துவிட்டது.
சவுமியா
இதையடுத்து வைரமுருகன், சவுமியா, வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவர் ஆகிய பேரையும் கைது செய்தனர். விசாரணையில் சவுமியா சொன்னதாவது: "நாங்க 2 பேருமே கூலி வேலை செய்கிறோம்.. 3 வயசில் ஏற்கனவே பெண் குழந்தை இருக்கு.. இந்த குழந்தையாவது ஆம்பிள பிள்ளையா பொறக்கும் என்று நம்பினோம்.. திரும்பவும் பொண்ணே பொறந்துடுச்சு.. குழந்தையை பார்க்க வந்தவங்க எல்லாருமே "2வதும் பொண்ணா, என்ன பண்ணப் போறேன்னு" கேட்டடாங்க.. அதான் கொன்னுடலாம் என்று முடிவு செய்தோம்.. எருக்கம்பாலை தந்தோம்.. குழந்தை செத்துடுச்சு.. யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு பக்கத்தில் குழியை தோண்டி புதைச்சிட்டோம்.. இந்த குழந்தையை வேற யாருக்கும் தரவும் எங்களுக்கு இஷ்டம் இல்லை" என்றார்.
கள்ளிப்பால்
திரும்பவும் பெண் சிசு கொலை தலைதூக்கி உள்ளதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக ஒலிக்க தொடங்கி உள்ளன.. அதே சமயம் குழந்தையை கொன்றதில் 3 பேர் தவிர வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.. அதனால் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனரோ எல்லாரையும் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசமாக குரல் எழுப்பி உள்ளனர்.
கொலையா?
இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால், இந்த சம்பவம் நடந்த அதே வேளையில் உசிலம்பட்டி அருகே பிறந்த 18 நாட்களில் ஒரு பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.. அந்த குழந்தையும் இவ்வளவுநாள் நன்றாகத்தான் இருந்ததாம்.. அதனால் அதுவும் கொலை செய்யப்பட்டதா என்று கிராம மக்கள் அச்சமும், சந்தேகமும் அடைந்துள்ளனர்.
மூச்சு திணறல்
இதையடுத்து, வாலாந்தூர் போலீசார் விரைந்து சென்று அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில், மூச்சு திணறலினால் குழந்தை இறந்துள்ளதாக டாக்டர்கள் சொன்னர்கள்.. இதையடுத்து அப்பெண் குழந்தையின் உடலை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கள்ளிப்பால், எருக்கம்பால் என்று திரும்பவும் பழைய கொடூரங்கள் இதே மதுரை, உசிலம்பட்டி பகுதிகளில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது பெருத்த அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.