ராஜிவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க கோரி அவரது தாயார் வழங்கிய, மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ரவிச்சந்திரன்.
இந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க கோரி அவரது தாயார், மதுரை சிறை நிர்வாகத்திடம் மனு வழங்கினார். ஆனால், இந்த மனுவை மதுரை சிறைத்துறை நிராகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க இயலாது என்று ரவிச்சந்திரனின் தாயாருக்கு மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.
2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வருடம், மார்ச் மாதம், சொத்துகளை பாகப்பிரிவினை செய்வதற்காக 15 நாட்களுக்கு நிபந்தனைகளுடன் பரோல் விடுப்பு ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. சிறையில் இருந்து அப்போது 4வது முறையாக பரோலில் வெளிவந்தார் ரவிச்சந்திரன். அவரது வீடு அருப்புக்கோட்டையில் உள்ளது.
ரவிச்சந்திரன் ஊடகங்களை சந்திக்கக் கூடாது, எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது, தடை செய்யப்பட்ட இயங்கங்களின் தலைவர்களை சந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அப்போது விதிக்கப்பட்டன.