"இவர்தான் முக்கிய குற்றவாளி".. சிபிஐ வாதத்தை ஏற்று காவலர் முத்துராஜுக்கு மட்டும் காவல் நீட்டிப்பு
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ்தான் முக்கிய குற்றவாளி என்றும் அவரை மேலும் ஒரு நாள் விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியதை அடுத்து அவருக்கு நாளை மாலை 5.30 மணி வரை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனைய 4 பேருக்கும் வரும் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மதுரை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை நடத்தியது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு முன்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
சாத்தான்குளம் சிறுமி படுகொலை.. டிரம்மில் திணிக்கப்பட்ட உடல்.. கழுத்து, உதட்டில் காயம்.. கொடூரம்!
கோரிக்கை
இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இதையடுத்து அவர்களை காவலில் எடுக்க மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்தது.
ஜூலை 16
அந்த மனு மீது கடந்த 14-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஹேமந்த் குமார் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை நீதிமன்றத்தில் 5 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரும் ஜூலை 16-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தொந்தரவு
இந்த நிலையில் அவர்கள் 5 பேரின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் மதுரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சிபிஐ அதிகாரிகள் யாரேனும் விசாரணை என்ற பெயரில் உணவு வழங்காமல், மன உளைச்சலை ஏற்படுத்தி தொந்தரவு செய்தனரா என நீதிபதி கேட்டார்.
மனு தாக்கல்
அதற்கு அவர்கள் 5 பேரும் இல்லை என்றார்கள். பின்னர் தந்தை மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக காவலர் முத்துராஜை கருதுகிறோம். அவரிடம் மேலும் ஒரு நாள் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது.
முத்துராஜுக்கு மட்டும்
இதையேற்ற நீதிபதி, காவலர் முத்துராஜுக்கு நாளை மாலை 5.30 மணி வரை சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன் ஆகிய 4 பேரையும் வரும் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். முன்னதாக முத்துராஜை அவர் பணியாற்றிய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சிபிஐ விசாரணை நடத்தியதாக தெரிகிறது.