வைகை கரையில் துறவியர் மாநாட்டுக்கு அனுமதி தரக் கூடாது- மதுரை ஆட்சியரிடம் மனு
மதுரை: வைகை கரையில் துறவியர் மாநாடு நடத்த அனுமதி தரக் கூடாது என்று மதுரை ஆட்சியரிடம் மக்கள் சிவில் உரிமைக் கழகம் உள்ளிட்ட 7 இயக்கங்கள் மனு அளித்துள்ளது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், திராவிடர் கழக வழக்கறிஞர் சங்கம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், சமநீதி வழக்கறிஞர் சங்கம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகியவற்றின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனு:
எதிர்வரும் ஜூலை- 24 முதல் ஆகஸ்ட்- 4 வரை மதுரை வைகை கரை புட்டுத் தோப்பில் துறவியர்கள் மாநாடு ,சாக்த மாநாடு, கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு ,ஐயப்ப சேவா சமாஜம் மாநாடு, பாதுகாப்பு மாநாடு, ஆடிப்பெருக்கு வைகையில் புனித நீராடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மேற்படி நிகழ்வு வைகை நதியை காக்க என அறிவித்துவிட்டு சில குறிப்பிட்ட மத அடிப்படைவாத அமைப்புகள் தங்கள் மதவாத அரசியலை மதுரையில் நடத்த முற்படுகின்றனர்.
இந்த மதவாத அரசியலுக்கு அனைத்து மக்களுக்கும் பொதுவான வைகை நதியை கேடாக பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே வைகைநதி சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மாசுபட்டு வறண்டு கிடக்கிறது.
அதில் மத நிகழ்வை நடத்த அனுமதித்தால் வைகைநதி இன்னும் மாசுபடும். வைகையில் தண்ணீர் கொண்டுவர சுற்றுச்சூழல் அமைப்புகள் பாடுபடும் நிலையில், குறிப்பிட்ட மதவாத அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வைகையிலும் வைகைக் கரையில் கூட அனுமதிப்பது வைகையை நாசப்படுத்த மாவட்ட நிர்வாகமே துணை நிற்பது ஆகும்.
எனவே ,வைகை நதியில் மேற்படி குறிப்பிட்ட சில மத அடிப்படைவாத அமைப்புகளின் நிகழ்வே அனுமதிக்க கூடாது. மேலும், மதுரை மாநகர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் மத ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது.
இதனை சீர்குலைத்து மக்களிடையே மதரீதியில் பிளவை உண்டாக்கி வட மாநிலங்கள் போல மதக் கலவரங்களை தூண்ட சில அடிப்படைவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன. இதற்கு அரசு கட்டமைப்பை பயன்படுத்தும் முயற்சியும் நடக்கிறது.
தமிழக மக்களின் மரபு "யாதும் ஊரே யாவரும் கேளிர்", மதநல்லிணக்கம், மத ஒற்றுமை ,மனிதநேயம் என்பதாகும். பெரும்பான்மையான தமிழக மக்கள் வேத மரபை மறுத்த முன்னோர்களுக்கு ஆடு வெட்டி வழிபடும் முறையை பின்பற்றுபவர்கள். ஆனால் இந்த நிகழ்வை நடத்தும் அமைப்பினர் வேத மரபை பின்பற்றுபவர்கள்.
அவர்களின் நோக்கம் மக்களை மத ரீதியில் பிளவு படுத்துவது வட இந்தியாவில் இவர்களை ஒத்த சிந்தனை கொண்ட அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தா ஆகிய அமைப்பினர் குண்டுவெடிப்பு, கொலை உள்ளிட்ட சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறையில் உள்ளனர். எனவே அரசியல் சட்டத்தின் அடிப்படை கருத்தாக்கமாக மதசார்பின்மை கோட்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் ஊக்குவிக்கக்கூடாது. கலந்துகொள்ளக்கூடாது.
எனவே வைகை நதியின் சுற்றுச்சூழல் மற்றும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை காரணமான மதசார்பின்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வைகாசிப் பெருவிழா 2019 என்ற பெயரில் அகில பாரத துறவியர்கள் சங்கம் நிகழ்விற்கு வைகை கரை மற்றும் வைகையாற்றில் நடத்த அனுமதிக்க அளிக்கக்கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் யாரும் பங்கேற்க கூடாது எனக் கூறுகிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.