வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிய கிராமம்.. தண்ணீரை தேடி காடு, மேடெல்லாம் திரியும் மக்கள்
மேலூர்: நாடு முழுவதுமே வறட்சியின் பிடியில் சிக்கி வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை அருகேயுள்ள கருங்கலக்குடி என்ற கிராமத்தில் வரலாறு காணாத வகையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாகவும், பருவ மழை கைவிட்டதாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. பொதுவாக தண்ணீர் பஞ்சம் என்றாலே தமிழகத்தின் தலைநகர் சென்னை தான் நினைவுக்கு வரும்.
ஆனால் நடப்பாண்டிலோ தமிழகத்தின் பல மாவட்டங்களை பாரபட்சமின்றி தாக்கியுள்ளான் வறட்சி என்னும் அரக்கன். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்கள், திருப்பூர் அவினாசி என கொங்கு மண்டலத்தையும் விட்டு வைக்கவில்லை வறட்சி பாதிப்பு.
நிலத்தடி நீர்மட்டம் கண்காணாத தூரத்திற்கு சென்று விட்டதால், பல இடங்களில் 500 முதல் 1000 அடி தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்கவில்லை என மக்கள் புலம்பி தவிக்கின்றனர். மருத்துவமனைகள், பள்ளிகள், அலுவலகங்கள் என எங்கெங்கு காணினும் தண்ணீர் பற்றாக்குறை பேச்சுதான்.
Madurai: Residents of Karungalakudi village in Melur travel long distances to collect water amid water scarcity & absence of water tanker supply in the area. #TamilNadu pic.twitter.com/Jt3ytgnnrC
— ANI (@ANI) June 9, 2019
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கருங்கலக்குடி என்ற கிராமத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. கருங்கலக்குடி பகுதியில் டாங்கர் தண்ணீர் விநியோகமும் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி கிராமவாசிகளின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தங்களது அடிப்படை தேவைகளுக்கு கூட நீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிடப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்.. மணப்பாறையில் தண்ணீர் பஞ்சம்.. உபரிநீரை பயன்படுத்தும் நிலை
தேவையான தண்ணீர் கிடைக்காததால் கருங்கலக்குடி பொதுமக்கள் தங்களது சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் காலி குடங்களை எடுத்து கொண்டு, தண்ணீர் எங்கே கிடைக்கும் என பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடி அலையும் அவல நிலை காணப்படுகிறது. சிறிய ஓடையாக இருந்தால் கூட அதிலிருந்து சிரமப்பட்டு சிறிது சிறிதாக தண்ணீரை சேகரித்து குடங்களில் நிரப்பி வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.
இரவு, பகல் பாராமல் தண்ணீர் தேடி அலைய வேண்டியுள்ளதால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானத்தையும் இழந்து தவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். நீர் பற்றாக்குறை காரணமாக தங்கது தோட்டங்களில் வளர்க்கப்படும் பல்வேறு மரங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்
தண்ணீர் தட்டுப்பாட்டால் தங்களது அன்றாட பணிகளை கூட செய்து கொள்ள முடிவதில்லை என கருங்கலக்குடி கிராம மக்கள் குமுறுகிறார்கள். நீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.