தமிழக ரயில்வேயில் தமிழ் தெரியாதவர்களை பணியில் அமர்த்த தடைக்கோரி வழக்கு.. தென்னக ரயில்வேக்கு நோட்டீஸ்
மதுரை: தமிழகத்தில் ரயில்வே பணிகளில் ஸ்டேசன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் தமிழ் தெரியாதவர்களை பணியில் அமர்த்த தடை கோரிய வழக்கில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மணவாளன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மதுரை- கள்ளிக்குடி -திருமங்கலம் ரயில்வே பாதையில் கடந்த 8ம் தேதி நிகழவிருந்த விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. இந்த நிகழ்வு ரயில்வேயில் சில மாறுதல்களை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
பொதுவாக ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் தேர்ச்சி பெறுகின்றனர்.
இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார்... மதுரையில் கமலுக்கு எதிராக போராட்டம்
தமிழகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களில் 15சதவீதம் முதல் 20 சதவீத ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பாக ஸ்டேசன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட முக்கிய பணிகளில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் தமிழ்மொழி தெரிவது இல்லை,
கள்ளிக்குடி விபத்து ஏற்படும் சூழலுக்கு முக்கிய காரணமாக அங்கிருந்த அதிகாரிகளுக்கு தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்னையே காரணமாக கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் ஸ்டேசன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட முக்கிய ரயில்வே பணிகளில் தமிழ்மொழி தெரிந்தவர்களையே பணியில் அமர்த்த வேண்டும் என தென்னக ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு தண்டபாணி ஆகியோர் அமர்வு விசாரித்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை ஜுன் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.