பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்
மதுரை: மதுரை அருகே மேலூரில் குடிநீர் குழாய் உடைந்து போனதால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்த பைப் பழுதை சரி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர். ஊரெல்லாம் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி நான்கு வழிச் சாலையோரம் தும்பைப்பட்டி பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் செல்கின்றன. இக்குழாயில் கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பீச்சி அடித்து வீணாகி அருகில் உள்ள வயல் வெளிப்பகுதியில் பாய்ந்து வருகின்றது.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து கோரதாண்டவம் ஆடிவரும் சூழ்நிலையிலும், தண்ணீருக்காக மேலூர் பகுதிகளில் சாலைமறியல் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும் இங்கு தண்ணீர் வீணாகி மேலும் பஞ்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.