தேனியில் ஏப். 13-ம் தேதி மோடி பிரச்சாரம் செய்கிறார்… அமைச்சர் உதயகுமார் தகவல்
மதுரை: துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திர நாத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் தேதி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை வண்டலூர் அருகே நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதற்கிடையே , ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ள பிரதமர் மோடி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 6-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமியும், 13-ம் தேதி பிரதமர் மோடியும் பிரச்சாரம் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுக வேட்பாளருமான ரவீந்திர நாத்திற்கு ஆதரவாக அமைச்சர் உதயகுமார், கிராம், கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, டிடிவி தினகரனின் சின்னமான பரிசுப் பெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.