சாலை நெடுக ஜல்லி கற்கள்.. சறுக்கி விழுந்த டூ-வீலர்கள்.. கால் கடுக்க அள்ளிய போலீஸ்
மதுரை: தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லிக் கற்களை போலீசார் இணைந்து உடனடியாக அப்புறப்படுத்தினர்.
Recommended Video
பழங்காநத்தம் - திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே, நேற்று இரவு லாரியில் சென்று கொண்டிருந்த ஜல்லி கற்கள் சாலை நெடுகிலும் கொட்டியிருக்கிறது. இதை லாரி டிரைவர், கிளீனர் என எவரும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
இதில் அதிக அளவாக, டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்க பாதை அருகே, 10 அடி தூரத்திற்கு ஜல்லி கற்கள் சிதறிக் கிடந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்து சிறு காயங்களுடன் தானாக எழுந்து சென்றார்கள்.
இது குறித்து சுப்பிரமணியபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால், உதவி ஆய்வாளர் சேகர், காவலர் திருப்பதி ஆகியோர் இணைந்து சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரத்தில் ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற லாரி, சரியாக மூடாமல் இருந்ததால், சாலை முழுவதும் ஜல்லிக் கற்களை சிதற விட்டு சென்று இருக்கலாம் என தெரிய வருகிறது.
துரிதமாக செயல்பட்டு ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்