வழக்கை நிர்மலாதேவியுடன் முடிக்க பார்க்கிறார்கள்... வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பகீர்
மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் அமைச்சர்கள் தலையிட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் குற்றச்சாட்டு வைத்து உள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பசும்பென் பாண்டியன் பேசியதாவது : வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என நிர்மலாதேவியை போலீஸ் மிரட்டுகிறது என்றார்.
முக்கியப் பிரமுகர்களின் பெயர்களைச் சொன்னால் உயிர் இருக்காது என மிரட்டி உள்ளனர். நிர்மலா தேவிக்கு சாதகமான ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன என்றும் கூறினார்.
மேலும், அமைச்சர்கள் நிர்மலா தேவி வழக்கில் தலையிட்டு உள்ளனர். காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளை காப்பாற்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடித்து கையெழுத்து வாங்கியதாக நிர்மலா தேவி கூறியதாகவும் தெரிவித்தார்.
வழக்கை நிர்மலாதேவியுடன் முடிக்க அரசு நினைப்பதாகவும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வைத்து நிர்மலாதேவிக்கு போலீஸ் மிரட்டல் விடுத்துள்ளனர் என்றும், நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறினார்.