கண்கள் இருண்டாலும்... தன்னம்பிக்கை இருளவில்லை... ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிகண்ட பூர்ணசுந்தரி
மதுரை: பார்வை குறைபாடுடைய 25 வயது இளம்பெண் பூர்ண சுந்தரி தனது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதில் 296-வது இடம்பெற்று பூர்ண சுந்தரி தேர்ச்சி அடைந்துள்ளார்.
மூன்று முறை சிவில் சர்வீஸ் தேர்வில் தோல்வி அடைந்தும் பார்வை இல்லை என்றால் என்ன நம்மால் முடியும் என்ற வைராக்கியத்தோடு போராடி இந்தமுறை வெற்றிகண்டுள்ளார் இவர்.
ஐஐடிகளில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது?.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி
பார்வை பறிபோனது
மதுரை சிம்மக்கல் அருகே உள்ள மணிநகரம் பகுதியை சேர்ந்தவர் பூர்ண சுந்தரி. 25 வயதாகும் இவர் தனது 5-வது வயதில் கண் நரம்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பார்வையை பறிகொடுத்தார். பார்வை பறிபோய்விட்டதே என வீட்டில் முடங்கி கிடக்காமல் ஆர்வத்துடன் கல்வி கற்று பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளார் இந்த புதுமைப் பெண் பூர்ண சுந்தரி. எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், பார்வை திறனற்ற நிலையிலும் தனது தன்னம்பிக்கை திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
தாய், தந்தை
ஒன்றாம் வகுப்பில் தொடங்கி 12-ம் வகுப்பு வரை படிப்பில் டாப் மதிப்பெண்கள் பெற்ற பூர்ண சுந்தரி, வீட்டில் தனது தாய், தந்தை உதவியுடன் பாடங்களை புரிந்து வந்துள்ளார். வரிக்கு வரி பாடங்களை அழுத்தம் திருத்தமாக பூர்ண சுந்தரியின் தாயும், தந்தையும் வாசிக்க அதைக் கேட்டு விவரங்களை பதிய வைத்து வந்திருக்கிறார் பூர்ண சுந்தரி. மேலும், அவருக்கு அவரது பெற்றோர் இரு கண்களாக திகழ்ந்து ஊக்கம் அளித்து வந்துள்ளனர்.
போட்டித் தேர்வு
கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு என போட்டித் தேர்வுகளை எழுதி வந்துள்ளார் பூர்ண சுந்தரி. மூன்று முறை சிவில் சர்வீஸ் தேர்வில் தோல்வியடைந்தும் மனம் தளராமல் உறுதியோடும், லட்சியத்தோடும் போராடி இந்த முறை எழுதிய தேர்வில் வெற்றி கண்டிருக்கிறார். இதனிடையே இவர் வங்கித் தேர்வு ஒன்றில் வெற்றி பெற்று சில மாதங்கள் அங்கு பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
சாதனைப் பெண்
இன்று நம்மில் பலருக்கும் பல திறமைகள் இருந்தும், நம்மால் முடியுமா, நமக்கு சரி பட்டு வருமா என்ற நெகட்டிவ் எண்ணத்தால் வாய்ப்புகளை தவறவிட்டவர்கள் ஏராளம். இலக்கை அடைவதற்கான லட்சியமும், சாதிக்க வேண்டும் என்ற வேட்கையும், முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தால் யாராக இருந்தாலும் உயரத்தை எட்டி பிடிக்க முடியும் என்பதற்கு பூர்ண சுந்தரி ஒரு முன் மாதிரி பெண்ணாக திகழ்கிறார்.