கொரோனாவுக்கு இருக்கும் அறிவு கூட சில கட்சிகளுக்கு இல்லை.. பிரேமலதா நூதன பேச்சு
மதுரை: கொரோனாவுக்கு இருக்கும் அறிவுக் கூட சில கட்சிகளுக்கு இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அவர் மகளிர் தின வாழ்த்துகளை கூறினார். பின்னர் தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்னால் வந்து நிற்பேன் என தெரிவித்தார்.
மீனாட்சி அம்மன்
இதையடுத்து இந்த விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில் மீனாட்சி அம்மனின் அருளால் விஜயகாந்த் பூரண நலம் பெற்று வருகிறார். விரைவில் அவர் மக்களை சந்தித்து பொதுக் கூட்டங்களில் பேசுவார், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் விஜயகாந்த். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
தேமுதிக
இந்த தேர்தலில் தேமுதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக பதவியில் அமருவார். எனவே தொண்டர்கள் இப்போதே விழிப்புணர்வுடன் பணியாற்றுங்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சில கட்சிகள் நம் மாநில மக்களை சாதி, மதத்தால் பிரிக்க முயற்சிக்கின்றன.
ஜாதி, மதம்
ஒரு வைரஸான கொரோனாவுக்கு இருக்கும் அறிவுக் கூட சில அரசியல் கட்சிகளுக்கு இல்லை. கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கும் போது அவர் இந்துவா, முஸ்லீமா, கிறிஸ்துவரா என பார்ப்பதில்லை. ஆனால் சில கட்சிகள் ஜாதி, மதத்தால் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
தவிர்க்க வேண்டும்
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து குடியுரிமை பெறாமல் இருந்து கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்குத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம். இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முதல் கட்சியாக நாங்கள் களத்தில் நிற்போம். டிக்டாக் செயலியை பயன்படுத்துவதை பெண்கள் தவிர்க்க வேண்டும். இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் பேசினார்.