முதலமைச்சர் பழனிசாமிக்கு 65-வது பிறந்த நாள்... பிரதமர் மோடி வாழ்த்து
மதுரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று 65 -வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்பதால், வீதி,வீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்றிருந்த முதலமைச்சர் பழனிசாமி, இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்தார். அப்போது தனது பிறந்த நாளை கொண்டாடமல் எளிமை காட்டி, வழக்கம் போல் பிரச்சார பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
ஜெ., வழியில் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து.. தமிழிசை ட்விட்
முதலமைச்சர் பழனிசாமிக்கு இன்று பிறந்த நாள் என்பதை தெரிந்து வைத்திருந்த, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இதே போல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் கனவுகளை நன வாக்கி வரும் தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.