இனி வாஜ்பாய் திடல் என்றே அழைக்கப்படும்…மதுரையில் பிரதமர் மோடி பேசும் மைதானத்தின் பெயரை மாற்றிய பாஜக
மதுரை:மதுரையில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கும் மைதானம் 'அடல் பிஹாரி வாஜ்பாய் திடல்'என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமது தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கிவிட்டார். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் அவர் பிரச்சாரத்தை துவங்கி, பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுரையிலிருந்து தமிழகத்திற்கான லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதற்காக மதுரை ரிங்க்ரோடு பகுதியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதற்கான ஆய்வு பணிகளை பாஜகவின் மாநில செயலாளர் ஆர். ஸ்ரீனிவாசன் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
பேட்டியின் போது அவர் கூறியதாவது: மதுரையில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதியை சேர்ந்த பாஜக தொண்டர்கள் பிரதமர் உரை நிகழ்த்தும் கூட்டத்திற்கு வருவார்கள். மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கான வரவேற்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மதுரைக்கு வரும் 27ம் தேதி வரும் மோடி, அம்மா திடலை தாண்டி 5 கி.மீ தூரமுள்ள மைதானத்தில் உரை நிகழ்த்துகிறார். அந்த மைதானம் பிறகு அடல் பிஹாரி வாஜ்பாய் திடல் என்று பெயர் மாற்றப்பட உள்ளது என்று ஆர். ஸ்ரீனிவாசன் கூறினார்.