செல்போன், தம், டிவி.. மதுரை மத்திய சிறையில் சகல வசதி... அதிரடி ரெய்டில் அதிர்ச்சி
மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சில நாட்களுக்கு முன் சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருந்து வந்தது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தி, கைதிகள் பயன்படுத்திய செல்போன்கள், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த டி.வி.க்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் 70 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.
சிறை வளாகம், கைதிகள் அறை, சமையலறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, கைதிகளிடம் இருந்து பிளேடு, செல்போன், பீடி மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சிறையில் பாடம் நடத்தும் ஆசிரியர், கைதிக்கு செல்போன் கொடுத்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் கைது செய்யப்பட்டதை அடுத்து சிறையில் போலீசார் மீண்டும் சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.