தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: தஞ்சை பெரியகோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், திருப்பந்துறை சீனிவாசபுரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
கடந்த 7 ம் தேதி, அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட போது, தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: தஞ்சை பெரிய கோயில் கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது. கோயிலின் பாரம்பரியம் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆகையால், மத வழிபாடு சார்ந்ததும், கோயில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயில் வளாகத்தில் வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் சம்பிரதாயப்படி நடப்பதையும், கோயிலின் பழமை மாறாமலும், பாரம்பரியமும், தொல்லியல் சின்னங்களும் பாதிப்பின்றி பாதுகாப்பாக உள்ளன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.