அந்த "இலை காலியா இருக்கு பாருங்க.." அன்பான மனசு இருக்கே.. அதுதான் ராகுல் காந்தி.. அசந்து போன மக்கள்!
மதுரை: "பக்கத்து இலையையும் பார்த்து, அவுங்களுக்கும் சாப்பாடு வைங்க என்று சொல்கிற மனசு இருக்கே.. அதுதான் சார் கடவுள்.." என்ற பேச்சு நேற்று முதல் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
ராகுல் காந்தியின் தமிழக வருகையும், அவரது செயல்பாடுகளும்தான், இப்படி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை ராகுல் காந்தி பார்த்தது, மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டது, பாட்டிமார்களுடன் போட்டோ எடுத்தது என்பதை பற்றி பேச்சுக்களை எங்கும் பார்க்க முடிகிறது.
சமூக வலைத்தளங்களில் மட்டுமே பேசப்படவில்லை.. டீக் கடைகளிலும், சலூன் கடைகளிலும், சாமானியர்களும் ராகுல் வருகையை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் அவருக்கு கிடைத்த வெற்றி.. இல்லை, இல்லை.. அவரின் எளிமையான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி.
ஜல்லிக்கட்டு பார்த்த ராகுல் காந்தி
ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காக தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து மதுரை வந்தார் ராகுல். இதையடுத்து சுமார் 45 நிமிடங்கள் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த அவர் அதற்கு பிறகு தென் பழஞ்சி என்ற கிராமத்திற்குச் சென்றார். அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் நடைமுறைகளை ரசித்து பார்த்தார்.
இயல்பான ராகுல் காந்தி
பின்னர், ஊரில் மக்களோடு மக்களாக அமர்ந்து உணவு சாப்பிட்டார். தேர்தல் நேரத்தில் செய்யப்படும் அரசியல்வாதிகளின் "ஸ்டண்ட்" என்று ராகுல் காந்தியின் இந்த பொது விருந்து நிகழ்ச்சியை கடந்து போக முடியவில்லை. காரணம்.. அவர் சாமானியர்கள் மீது வைத்துள்ள அக்கறை. அதை ஸ்க்ரிப்ட் எழுதி வைத்து செய்து காட்ட முடியாது. அப்படி ஒரு சம்பவம்தான், உணவு சாப்பிடும் நேரத்தில் நடந்தது.
பொது விருந்து
மக்களோடு மக்களாக உணவு சாப்பிட ராகுல் காந்தி, பந்தியில் அமர்ந்தாலும், காங்கிரஸ் நிர்வாகிகள், அவருக்குத்தான் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவருக்கு இடதுபக்கம், ஒரு தாயும், குழந்தையும் வந்து அமர்ந்தனர். அவர்களுக்கு இலை போடப்பட்டிருந்ததே தவிர சாப்பாடு பரிமாறப்படவில்லை. வலதுபுறம் நிறைய மூதாட்டிகள் வரிசையாக இருந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே ராகுல் காந்தியுடன் சேர்த்தே உணவு பரிமாறப்பட்டிருந்ததால் அவர்கள் சாப்பிட்டபடி இருந்தனர்.
|
தாயும், குழந்தையும்
இந்த நிலையில்தான், இடதுபக்கம் அமர்ந்த தாயையும், குழந்தையும் ராகுல் காந்தி பார்த்தார், அவர்கள் இலையில் சோறு பரிமாறப்படவில்லை என்பதையும் கவனித்தார். உடனே, அவர்களை நோக்கி கை காட்டி, உணவு பரிமாறுங்கள் என்றார். அவ்வளவுதான்.. அங்கே நின்று கொண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கால்களில் சக்கரமே முளைத்துவிட்டது. அடித்துபிடித்து ஓடிச் சென்று உணவு பரிமாறினர். அந்த தாயும், குழந்தையும் வயிறார சாப்பிட்டனர். இந்த நிகழ்ச்சி வீடியோவாக வெளியாகி பார்ப்போரால் பாராட்டப்படுகிறது.
தலைவரின் இலக்கணம்
பொதுவாக அரசியல் பிரமுகர்கள் மக்களோடு மக்களாக உட்கார்ந்து சாப்பிடும்போது, புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதிலும், தங்கள் இலையை பார்த்து சரியாக சாப்பிட வேண்டுமே என்ற கவனத்தோடும் இருப்பார்கள். ஆனால் ராகுல் காந்தி, அருகேயுள்ள பசித்த வயிறுகளையும் பார்த்துள்ளார். ஒரு தலைவரின் இலக்கணம் இதுதான் என்கிறார்கள், மக்கள். இந்த விஷயத்தில், எம்ஜிஆரின் செயல்பாடுகளோடு ராகுல் காந்தியை ஒப்பிட்டு பாராட்டுவோரும் இருக்கிறார்கள்.
ராகுல் காந்தி மனித நேயம்
கொரோனா ஊரடங்கு காலத்தில், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்கு சென்றனர் புலம் பெயர் தொழிலாளர்கள். அப்போது, டெல்லியில் அவர்களை ஓடிச் சென்று பார்த்து, சிலருக்கு தனது காரை கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார் ராகுல் காந்தி என்பது இந்த நேரத்தில் நினைவு கூறத் தக்கதாக உள்ளது.