பாஜகவின் நம்ம பொங்கலுக்கு போட்டியாக களமிறங்கும் ராகுல்...அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வருகிறார்
பாஜகவின் நம்ம பொங்கல் பண்டிகையை கலகலக்க வைக்க வருகிறார் மதுரைக்கு வருகிறார் ராகுல்காந்தி. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தயாராகி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
மதுரை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை பொங்கல் விழா. போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் விழா களைகட்டும். இந்த ஆண்டு தேர்தல் பொங்கலாக மாறி வருகிறது. ஆளும் அதிமுக அரசு பொங்கல் பரிசு கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தது. திமுகவினர் பொங்கல் சீர் கொடுக்கின்றனர். அமைச்சர்களும் தங்கள் பங்கிற்கு பொங்கல் பானை கொடுக்கின்றனர். பாஜகவினர் நம்ம பொங்கல் கொண்டாடுகின்றனர். காங்கிரஸ் கட்சியோ என்ன செய்வது என்று யோசித்து கடைசியில் ஜல்லிக்கட்டு போட்டியை ரசிக்க ராகுல்காந்தியை மதுரைக்கு அழைத்து வந்து 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் பொங்கல் கொண்டாடுகின்றனர்.
Recommended Video
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிக்கையையொட்டி தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுத் திருவிழா மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் அடுத் தடுத்த நாட்களில் நடப்பது வழக்கம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண திட்டமிட்ட அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை மறுநாள் அவனியாபுரம் வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்துள்ளார்.
ராகுலின் தமிழ் வணக்கம்
தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாள் அன்று ராகுலின் தமிழ் வணக்கம் என்ற தலைப்பில், ஜனவரி 14 தேதி மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகத்திற்கு ராகுல் காந்தி வருகிறார். அப்போது ராகுலின் புகழ் கொடிகட்டிப் பறக்க இருக்கிறது. மதுரைக்கு விமானம் மூலம் சரியாக ஜனவரி 14ஆம் தேதி 11 மணிக்கு ராகுல்காந்தி வருகிறார். விவசாயிகளின் அங்கம் அறுவடை திருநாள் என்ற அடிப்படையில் தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் 4 மணி நேரம் செலவிடுவார் என்றும் கேஎஸ் அழகிரி தெரிவித்தார்.
2 மணி நேரம் ரசிக்கும் ராகுல்காந்தி
டெல்லியில் இருந்து நேரடி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வரும் ராகுல்காந்தி கார் மூலம் ஜல்லிக்கட்டு திடலுக்கு செல்கிறார். அங்கு சுமார் 2 மணி நேரம் பார்வையாளர் கேலரியில் அமர்ந்து வாடிவாசலில் துள்ளிக் குதிக்கும் காளைகள் மற்றும் அடக்கும் காளையர்களின் விளையாட்டைக் கண்டுகளிக்க உள்ளார். இதன்பின், விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு
ராகுல்காந்தியின் மதுரை வருகையையொட்டி விமான நிலையம், அவனியாபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ''தமிழர் பாரம்பரியம் , பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு விழாவை காணும் வகையில், எங்களது கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மதுரை வருகிறார்.
உற்சாக வரவேற்பு தர திட்டம்
ராகுல்காந்திக்கு மதுரை மாநகர் மற்றும் வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில், 4 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், விமான நிலையத்தில் இருந்து மதுரை நகர் தெற்கு வாசல் வழியாக அவர் வந்து செல்லும் வகையிலும் காவல்துறையினரிடம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி பொறுத்து நகருக்குள் அழைத்து வருவது குறித்து திட்டமிடுவோம் என்று கூறியுள்ளார்.
நம்ம பொங்கலுக்கு போட்டி
பாஜக சார்பில் குஷ்பு, நமீதா, கவுதமி போன்ற நடிகைகளை வைத்து சர்க்கரைப் பொங்கல் வைத்து நம்ம பொங்கல் கொண்டாடுகிறது பாஜக. காங்கிரஸ் கட்சியில் என்ன செய்வது என்று யோசித்து கடைசியில் டெல்லியில் இருந்து ராகுல்காந்தியை மதுரைக்கு அழைத்து வருகின்றனர்.