ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி... மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தல்..!
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மிகவும் ஆர்வமுடன் கண்டு ரசித்தார்.
வாடிவாசலில் காளைகள் சீறி வருவதை கண்ட அவர் ஜல்லிக்கட்டு குறித்த மேலும் சில விவரங்களை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டு அறிந்துகொண்டார்.
Recommended Video
ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக மட்டும் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் மதுரை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறி பாயும் காளைகள்... அடக்க குவிந்த காளையர்கள்..!
ராகுல் வருகை
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டதை அடுத்து கப்பலூர் வழியாக அவனியாபுரம் விரைந்தார்.
பலத்த பாதுகாப்பு
ராகுல்காந்தி அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராகுலின் கார் நேராக மேடையின் பின்புறம் சென்றதை அடுத்து அந்த மேடையில், ராகுலுடன் கே.எஸ்.அழகிரி, கே.சி.வேனுகோபால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு மட்டும் அனுமதி தரப்பட்டது.
கண்டுகளிப்பு
ஜல்லிக்கட்டை முதல்முறையாக நேரடியாக பார்த்ததால் மிகுந்த ஆர்வமுடன் கண்டு ரசிக்கத் தொடங்கினார் ராகுல். மாடு பிடி வீரர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த ராகுல், எவ்வாறு காளைகளை அவர்கள் லாவகமாக அடக்குகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்தார். இடையே வாடிவாசல் பகுதிக்கும் எழுந்து நடந்து சென்று காளைகள் அவிழ்த்துவிடப்படுவதை கண்டார்.
தள்ளி நிற்க அறிவுறுத்தல்
இதனிடையே ராகுல் அமர்ந்திருந்த இடத்திலும் அவர் மேடையில் நிற்கும் தருணத்திலும் மெய்க்காப்பாளர் அவரை சுற்றி நிற்க முயன்ற போது, அவரது கையை பிடித்து தள்ளி நிற்குமாறு அறிவுத்தினார் ராகுல்காந்தி. பொதுமக்கள் தன்னை பார்க்கட்டும் என்றும் அவர்களுக்கு மறைக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் மெய்க்காப்பாளரை தள்ளி நிற்க அறிவுறுத்தியதாக தெரிகிறது.