முதல்வருடன் ராஜ் சத்யன் திடீர் சந்திப்பு.. மருமகளுக்கு மேயர் சீட் கேட்கிறாரா ராஜன் செல்லப்பா..?
Recommended Video
மதுரை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என அதிரடி பேட்டிக்கொடுத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளார் மதுரை புறநகர் மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா.
அதிமுகவுக்கு தலைமை வகிக்கும் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்., ஆகியோரில் யாருக்கு ஆதரவாக இவர் பேசுகிறார் என்றும், ராஜன் செல்லப்பாவின் திடீர் பேட்டிக்கான காரணம் குறித்தும் நாம் மதுரை அதிமுகவினரிடம் விசாரித்த போது பல்வேறு காரணங்களை கூறினர்.
மக்களவைத் தேர்தலில் மகன் தோல்வியடைந்ததை ராஜன் செல்லப்பாவால் ஜீரணிக்க முடியவில்லையாம். இதற்கு காரணம் தேர்தல் பணிகளில் செல்லூர் ராஜூ தீவிர கவனம் செலுத்தாததே என அவர் கருதுகிறார். மேலும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மகளுக்கு மேயர் சீட் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ராஜன் செல்லப்பா தனது மருமகளை மேயர் ஆக்க வேண்டும் என நினைக்கிறாராம்.
மக்களவைத் தேர்தலில் தனது மகன் ராஜ் சத்யன் தோல்வியடைந்ததால், மேயர் தேர்தலில் போட்டியிட அவரது மனைவிக்கு தலைமை வாய்ப்பு தருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதனிடையே இரட்டை தலைமையை எதிர்ப்பதன் மூலம், தலைமை கழக நிர்வாகிகள் தன்னிடம் சமாதானம் பேச வருவார்கள் அப்போது தனது டிமாண்டை முன்வைக்கலாம் என்று அவர் திட்டமிட்டுள்ளார் எனக் கூறுகின்றனர் மதுரை ர.ர.க்கள்.
இதற்கிடையே, ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், முதல்வர் எடப்பாடியை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ராஜன் செல்லப்பா பேச்சு குறித்து அவர் விளக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சந்திப்பின்போது தனது மனைவிக்கு ராஜ்சத்யன் சீட் கேட்டு பேசினாரா என்ற விவரம் தெரியவில்லை.
ஆனால் செல்லூர் ராஜூ இம்முறை விடுவதாக இல்லையாம், மேயர் சீட்டை தனது மகளுக்கு பெற்றுகொடுப்பது என்ற முடிவில் தீர்க்கமாக உள்ளாராம். ஆக இப்பவே இப்படியென்றால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானால் குடுமிப்பிடிச்சண்டைக்கு பஞ்சமிருக்காது போல.