கொரோனா நிவாரணமாக ரூ 5000 வழங்கிய ராஜீவ்காந்தி கொலை வழக்கின் சிறைவாசி ரவிச்சந்திரன்
மதுரை: கொரோனா நிவாரணமாக ரூ 5 ஆயிரத்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாக 7 தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை விடுதலை செய்யக் கோரி அவர்களது குடும்பத்தினரும் தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ராஜீவ் கொலை வழக்கில் எம்.கே. நாராயணன் பதுக்கிய வீடியோ கேசட்.. அம்பலப்படுத்திய சிபிஐ ரகோத்தமன்!
இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக உதவ வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி இரவு நேர காவலர்கள், சிறு குழந்தைகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என நிதியுதவி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரன், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 5000 வழங்கியுள்ளார்.
சிறையில் தான் வேலை செய்ததால் கிடைத்த ஊதியத்தை கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளார். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இவர் இதற்கு முன்னர் ஹார்வார்டு தமிழ் பல்கலைக்கழக இருக்கைக்கு ரூ 20 ஆயிரமும், கஜா புயலுக்கு ரூ 5 ஆயிரமும் கொடுத்துள்ளார்.