கஜா புயலுக்கு நிதி வழங்கினார் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன்
மதுரை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரன், கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண நிதிக்காக ரூ. 5 ஆயிரத்தை வழங்கியுள்ளார்.
கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மழை ஓய்ந்தாலும் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் ஏதுமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், தொண்டு நிறுவனங்கள் என நிதியுதவியையும், நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைத்து வருகின்றனர்.
வேதனை
இது தொடர்பான செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்கள் மற்றும் டிவிகளில் வெளியாகின்றன. இதை ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பார்த்துவிட்டு சக கைதிகளிடம் வேதனை தெரிவித்துள்ளார்.
ரூ.5 ஆயிரம்
அப்பகுதி மக்களுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்ய நினைத்தார். அந்த வரையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் சிறையில் பணிபுரிந்தமைக்காக வழங்கப்பட்ட ஊதியத்தில் ரூ. 5 ஆயிரத்தை புயல் நிவாரண நிதிக்காக வழங்கினார்.
வெடிகுண்டு
இதை தனது வழக்கரைஞர் மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்தார். அப்போது வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
சிறையில் தண்டனை
இந்த வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
தீர்மானம்
இந்நிலையில் இவர்களது விடுதலை குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. ரவிச்சந்திரன் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஆவார்.