தூய்மை பணியாளர்கள் கால்களில் விழுந்து வணங்கிய அமைச்சர் உதயகுமார்.. நெகிழ்ச்சி
மதுரை: அமைச்சராச்சே என்று, எந்த கவுரவமும் பார்க்கவில்லை.. சட்டென்று, தூய்மை பணியாளர்கள் கால்களில் விழுந்து மரியாதை செய்துவிட்டார் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு, வேட்டி, சேலை போன்ற அத்தியாவசிய பொருட்களை மாநில வருவாய் பேரிடர் மேலாண்மை அமைச்சர் உதயகுமார் இன்று கப்பலூர் காமராசர் உறுப்பு கல்லூரியில் வைத்து வழங்கினார்.
மதுரை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பழமுதிர்ச்சோலை பக்தர்கள் சபையினர், சேதுபதி பள்ளியில் உணவு வழங்குவதையும் அவர் இன்று துவக்கி வைத்தார்.
திருப்பூரில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா நோயாளி எண்ணிக்கை.. விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய போலீசார்
இதைத்தொடர்ந்து திருமங்கலம் சென்றார் அமைச்சர் உதயகுமார். அங்கு, 750 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி ,வேட்டி, சேலை, கிருமிநாசினி, முகக்கவசங்களை வழங்கினார். அப்போது அவர்களை நாற்காலிகளில் அமர வைத்து பாராட்டிய அமைச்சர், அவர்களின் காலைத் தொட்டு வணங்கினார்.
இப்படி வணங்கும்போது அவர் சமூக இடைவெளியே பராமரித்ததையும் மறுக்க முடியாது. அமைச்சர் தங்கள் கால்களில் விழுந்து வணங்குவதை பார்த்ததும், சில தூய்மை பணியாளர்கள், அதிர்ச்சியடைந்து, நாற்காலியை விட்டு எழுந்து, "வேண்டாம் ஐயா.." என்று சொன்னதை பார்க்க முடிந்தது.
ஆனால், தூய்மை பணியாளர்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்று கூறி, அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார் ஆர்.பி.உதயகுமார்.