மதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. குறைந்து காணப்படும் வைகை அணை நீர்மட்டம்
மதுரை: வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுவதால் மதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி, மதுரை, திண்டுக்கல் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களின் விவசாய தேவை மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்வது வைகை அணை.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில், மதுரை மாநகராட்சிக்கு தினந்தோறும் சுமார் 250 முதல் 300 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டு வருகிறது.
இச்சூழலில் தான் அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே, வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் லாரி தண்ணீரை வாங்கும் நிலை ஏற்படுமோ என அஞ்சுகின்றனர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால், குடிநீருக்கு வைகையை மட்டுமே பெரிதும் நம்பியுள்ள மதுரை மாநகரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாய சூழல் நிலவுகிறது.
எனினும் சமீபத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக, தமிழக எல்லைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மழை தீவிரமடையும் பட்சத்தில் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூச்சி, புழு எல்லாமே கிடக்குது.. இதைத்தான் குடிக்கோணும்.. தண்ணீர்க் கொடுமையின் உச்சம்!
தமிழகம் முழுவதையுமே வறட்சி ஆட்டி வைத்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கிராம மக்கள் பல கிலோ மீட்டர் நடந்து சென்று ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி வேதனை தெரிவித்துள்ள மக்கள், சுமார் 6 முதல் 7 மணி நேரம் ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து ரூ.3,000 வரை பணம் செலவழித்து ஊற்று தோண்டினால் தான் சிறிதளாவது தண்ணீர் கிடைக்கிறது என கூறியுள்ளனர்.
அரசு விநியாகிக்கும் குடிநீர் 10 நாட்களுக்கு ருமுறை மட்டுமே வருவதாகவும், அதுவும் கழிவ் நீர் கலந்து வரும் எனவே அதனை பயன்படுத்த முடியாது என கூறினர். மேலும் பேசிய சில பெண்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்கப்படுவதாக குறிப்பிட்டனர்.
குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.