'போலீஸ்' தேர்வு எழுத வந்த 'திருடன்' விஜயகாந்த்.. அள்ளி கொண்டு போன போலீஸ்.. பரபர பின்னணி
போலீஸ் தேர்வு எழுதிய கொள்ளையன் கைது செய்யப்பட்டான்
மதுரை: போலீஸ் தேர்வு எழுதிய விஜயகாந்த் என்ற பிரபல செயின் பறிப்பு கொள்ளையனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த விஜயகாந்த். 22 வயதாகிறது. ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ இவருக்கு ஆசை. அப்பா பூ வியாபாரி.. அதில் பெரிசாக வருமானம் இல்லை.
தான் உழைச்சு சம்பாதிச்சாலும், உடனே தன் ஆசைகள் நிறைவேறாது என்பதால், செயின் பறிப்புதான் இதற்கு சரி என்று முடிவுக்கு வந்தார். படித்து கொண்டிருந்த பிகாம் படிப்பையும் பாதியிலேயே விட்டுவிட்டார்.
சிசிடிவி காமிரா
நண்பர்களுடன் சேர்ந்து நகை பறிப்பு வேலையில் இறங்கி வந்தார். பல பகுதிகளில் இருந்து செயின் பறிப்பு என்று போலீஸ் ஸ்டேஷனிலும் புகார்கள் வரவும், போலீசார் இது சம்பந்தமாக விசாரித்தனர். அப்போதுதான், விஜயகாந்தின் உருவம் ஒரு சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது.
நண்பர்கள்
அதனால் தலைமறைவாகி இருந்த விஜயகாந்த்தை தேடி வந்தனர். ஆனால் பல மாதங்களாகியும் இவரை பிடிக்க முடியாமல் இருந்தனர் போலீசார். அப்போதுதான், விஜயகாந்த், போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளார் என்றும், எப்படியும் தேர்வு எழுத வருவார் என்றும் அவரது நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர்.
கைது
அதன்படியே, அழகர்கோவில் பகுதியில் விஜயகாந்த் தேர்வு எழுத வந்தார். விழுந்து விழுந்து தேர்வு எழுதி கொண்டிருப்பதை ரகசியமாக போலீசாரும் கண்காணித்தனர். பின்னர் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, மதுரை புதூர் போலீசிலும் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கூட்டாளிகள்
திருடிய நகைகளை கொண்டு ஜாலியாக இருந்துள்ளார் விஜயகாந்த். அந்த பணம் காலியானதும், திரும்பவும் செயின் பறிப்பு என இறங்கி உள்ளார். இதுசம்பந்தமாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருவதுடன், செயின் பறிப்பில் ஈடுபட்ட மற்ற கூட்டாளிகளையும் தேடி வருகிறார்கள்.