சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 60 வயதிற்கு மேற்பட்ட பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மதுரை: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பத்து வயது முதல் அறுபது வயதுக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை முடிந்த மறுநாளே கார்த்திகை மாதம் பிறக்கிறது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உலகம் முழுவதும் இருக்கும் ஐயப்ப பக்தர்களில் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், பெரும்பாலோனோர் கார்த்திகை முதல் தேதி அன்று அதிகாலையிலேயே கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் மாலையணிந்து விரதமிருக்க தொடங்கிவிடுவார்கள்.
சிலர் மாலையணிந்து ஒரு சில நாட்களிலும், பலர் ஒரு சில வாரங்களிலும், பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்கும் சென்று வழிபட்டு வருவதும் ஆண்டு தோறும் தொடர்ந்து வரும் நடைமுறை. ஆனால், இந்த ஆண்டு அப்படி இல்லை. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேவசம் போர்டு விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி இருந்தாலும், பக்தர்களின் மூலம் மேலும் பரவாமல் இருப்பதற்காக, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அதே போல், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பத்து வயது முதல் அறுபது வயதுக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பத்து வயதுக்கு குறைவான மற்றும் அறுபது வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. அதோடு நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை, ஆயுஸ்மான் பாரத் அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள் சபரிமலை யாத்திரையின் போது கண்டிப்பாக உடன் கொண்டு வருவது அவசியமாகும்.
தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் கேரள காவல் துறையின் இணையதளத்தில் உள்ள தரிசன வரிசையில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், வார நாட்களில் நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் இரண்டாயிரம் பக்தர்களுக்கும் பதிவு செய்ய அனுமதியளிக்கப்படும்.
இது ஏமாற்று வேலை.. நாங்கள் வென்றுவிட்டோம்.. கோர்ட்டுக்கு செல்வோம்.. டிரம்ப் பரபரப்பு பேச்சு!
மேலும், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களில், குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரத்திற்கு முன், 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நோய்த் தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்று சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே தரிசன பதிவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதோடு, சுயவிருப்பத்தின் பேரிலும் கட்டணத்தின் அடிப்படையிலும், நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை செய்யவும் நுழைவு இடங்களிலும் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். விருப்பமுள்ள பக்தர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் நீராடுதல், இரவு நேரங்களில் சன்னிதான பகுதி, பம்பை ஆற்று கணபதி கோவில் ஆகிய இடங்களில் தங்குவதற்கும் அனுமதி கிடையாது. குறிப்பாக எருமேலி மற்றும் வடசேரிக்கரா வழியாக மட்டுமே ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.