இறுதிக்கட்டத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கு.. யுவராஜ் உள்ளிட்டோர் ஆஜர்
மதுரை: சேலம் கோகுல்ராஜ் மர்ம மரண வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விசாரணைக்காகத் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரோடு கல்லூரியில் சக மாணவியாகப் பயின்று வந்தவர் ஸ்வாதி. இவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் நெருங்கிப் பழகி வந்தார்கள்.
இந்நிலையில் இருவரும் 23.6.2015-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருவரையும் மிரட்டி உள்ளார்.
'மீன் கூடையா? இறங்கு இறங்கு..' குமரியில் நவீன தீண்டாமை?
கோகுல்ராஜ் கொலை வழக்கு
பிறகு ஸ்வாதியை அனுப்பிவிட்டு கோகுல்ராஜை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார். மறுநாள் 24.6.2015-ம் தேதி கோகுல்ராஜ் பள்ளிப்பாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே டிராக்கில் சடலமாகக் கிடந்தார். இவ்வழக்கை நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆணவக் கொலையாகப் பதிவு செய்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. பிறகு மதுரைக்கு மாற்றப்பட்டு தற்போது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
சிபிசிஐடி போலிசார் விசாரணை
இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேரும் நீண்ட தலைமறைவிற்குப் பின் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கான சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அரசு வழக்கறிஞர் மாற்றம்
இதனைத் தொடர்ந்து நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட்.30-ஆம் தேதி விசாரணையும் தொடங்கியது. இந்த வழக்கில் கோகுல்ராஜின் காதலி ஸ்வாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு சாட்சிகள் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்றக் கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
மதுரை நீதிமன்றத்தில் விசாரணை
இதையடுத்து அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது கடந்த 2019 மே-5-ஆம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்புத் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கானது இறுதிக்கட்ட விசாரணையை எட்டியுள்ள நிலையில் இன்று வழக்கானது வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.
யுவராஜ் உள்ளிட்டோர் ஆஜர்
வழக்கு விசாரணையின் போது வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.