யானைப்பாகன் குடும்பத்திற்கு சரவணன் எம்.எல்.ஏ. நிதியுதவி... நேரில் சந்தித்து ஆறுதல்
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கோயில் யானைத் தாக்கி உயிரிழந்த காளிதாஸ் என்பவரது குடும்பத்திற்கு அந்த தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் நிதியுதவி வழங்கினார்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த 2015-ம் வருடம் அஸ்ஸாமிலிருந்து தெய்வானை என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது. 14 வயதுடைய அந்த யானையை வழக்கம்போல் யானை பாகனின் உதவியாளர் காளிதாஸ் நேற்று முன் தினம் குளிப்பாட்ட அழைத்துச்சென்றுள்ளார். அப்போது திடீரென்று காளிதாஸை யானை பலமாக தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் காளிதாஸ் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் நிதியுதவியும் வழங்கினார். மேலும் காளிதாஸின் 3 வயது மகள் யோகிதாவின் படிப்புச் செலவுக்காக சொந்த நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஒரே வருஷத்தில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு
கொரோனா ஊரடங்கினால் கடந்த 60 நாட்களாக யானையை ஒரே இடத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டதால், அது கோபம் அடைந்திருக்கக் கூடும் எனக் கூறும் சரவணன் எம்.எல்.ஏ., அதனை புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த யானையால் இதுவரை 4 பேர் தாக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர், வனத்துறையிடம் இதை ஒப்படைத்துவிட்டு வேரு யானையை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும் என கோரியுள்ளார்.
யானைத் தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும், காளிதாஸின் மனைவி செவிலியருக்கு படித்திருப்பதால் அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி தர வேண்டும் எனவும் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.