சாத்தான்குளம் சம்பவம்.. தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. என்ன நடந்தது?
மதுரை: சாத்தான்குளம் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது, அதே இவர்கள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கு பின் என்ன நடந்தது, மாஜிஸ்டிரேட் கொடுத்த புகார் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.
கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி உள்ளது.லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட குற்றிவியல் நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், இன்று தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் இருவரையும் உடனடியாக பணி இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்டிரேட் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த விசாரணையின் போது கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. கோவில்பட்டி நீதிமன்ற மாஜிஸ்டிரேட் பாரதிதாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை. மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு தடை போடும் வகையில், விசாரணையை தடுக்கும் வகையில் செயல்பட்டனர். விசாரணை செய்ய சென்ற மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசினார்கள்" என்று இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்டிரேட் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது தூத்துக்குடி காவல் உயர் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
மாஜிஸ்திரேட்டை விமர்சித்த புகார்- தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பியை டிரான்ஸ்பர் செய்ய அதிரடி உத்தரவு
தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுதான் இவர்களின் இடமாற்ற உத்தரவுக்கு காரணம் ஆகும். அதோடு, மதுரை ஹைகோர்ட் கிளையில் நாளை ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.