‘இந்த சிலம்பக் கம்பை வச்சு அடிச்சாங்க.. ‘சாத்தான்குளம்’ ரத்தக்கறை லத்தி - சாட்சி சொன்ன பெண் போலீஸ்!
மதுரை : சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களை அடிக்க பயன்படுத்திய லத்தி, சிலம்பக் கம்பை அடையாளம் காட்டி தலைமை காவலர் சாட்சியளித்துள்ளார்.
சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் ஏற்கனவே, ஜெயராஜ், பென்னிக்ஸை போலீசார் கொடூரமாகத் தாக்கியது பற்றி சாட்சியம் அளித்த சாத்தான்குளம் தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி மீண்டும் ஆஜராகி, அவர்களை அடிக்கப் பயன்படுத்திய லத்தி மற்றும் சிலம்பக் கம்பை அடையாளம் காட்டினார்.
ரத்தக்கறை படிந்த லத்தி உள்ளிட்ட பொருட்களை ஏற்கனவே சிபிஐ போலீசார் கைப்பற்றி கோர்ட்டில் சமர்ப்பித்த நிலையில், அதனை அடையாளம் காட்டியுள்ளார் பியூலா செல்வகுமாரி.
ஜெயராஜ், பென்னிக்ஸ் கிறிஸ்தவர்கள்.. மாணவி இந்து! ஸ்டாலினை மத அடிப்படையில் விமர்சித்த எச்.ராஜா
சாத்தான்குளம் லாக்கப் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது கடையை அடைப்பது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீசார் கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தனர். தந்தை - மகன் இருவரும் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.
தலைமைக் காவலர் சாட்சியம்
இந்த வழக்கு கடந்த 20ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த 10 போலீசாரும் சேர்ந்து, தொடர்ச்சியாக தாக்கி, உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தி உயிர்போகும் அளவிற்கு அடித்ததாக தலைமைக் காவலர் பியூலா செல்வகுமாரி சாட்சியம் அளித்தார்.
விடாமல் அடிக்கச் சொன்ன ஸ்ரீதர்
போலீசார் ஜெயராஜை கடுமையாக தாக்கியபோது அவர் தனக்கு சர்க்கரை வியாதியும், ரத்த அழுத்தமும் இருக்கிறது என்றும் இதற்கு மேலும் தன்னை அடிக்க வேண்டாம் என்றும், வலி தாங்க முடியவில்லை என்று கூறியதாகவும், பென்னிக்ஸ் காவலர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அப்போது போலீசார் அடிப்பதை நிறுத்தியதாகவும் பியூலா செல்வக்குமாரி தெரிவித்துள்ளார். கீழ் ஃப்ளோரில் இருந்து போலீசார் தொடர்ந்து அடிக்கிறார்களா என கவனித்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீசாரை திட்டி ஏன் அடிக்காம இருக்கீங்க, சத்தமே கேக்கல எனக் கூறி மீண்டும் மீண்டும் அடிக்கச் சொன்னதாகவும் சாட்சி சொன்னார்.
மீண்டும் விசாரணை
இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரும் நேரில் ஆஜராகினர்.
சிலம்பக் கம்பு
சாட்சிய விசாரணை தொடங்கியபோது தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி ஆஜராகி ஜெயராஜ் மற்றும் பென்னிக்கிஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடிக்க பயன்படுத்திய லத்தி மற்றும் சிலம்பக் கம்பு போன்றவற்றை நீதிபதி முன்பு அடையாளம் காட்டினார்.
குறுக்கு விசாரணை
அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவலர் முத்துராஜாவின் வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ஆய்வாளர் ஶ்ரீதர் ஆகியோர் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து மற்றொரு தரப்பின் குறுக்கு விசாரணைக்காக வழக்கு வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.