மாஜிஸ்திரேட்டை விமர்சித்த புகார்- தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பியை டிரான்ஸ்பர் செய்ய அதிரடி உத்தரவு
மதுரை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசனை ஒருமையில் விமர்சித்ததாக எழுந்த புகாரையடுத்து தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் இருவரையும் உடனடியாக பணி இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
மேலும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை சாத்தான்குளத்தில் தங்கி விசாரணை நடத்தவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
சாத்தான்குளம் வழக்கு... கைது செய்ய நான் நினைவூட்ட வேண்டுமா..? -மு.க.ஸ்டாலின் கேள்வி
ஆட்சியர் கட்டுப்பாட்டில் போலீஸ் நிலையம்
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீசார் ஒத்துழைப்பு தராத காரணத்தால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் பரபரப்பான உத்தரவை பிறப்பித்திருந்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு கேஸ்
இதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் பாரதிதாசனை போலீசார் ஒருமையில் விசாரித்ததாகவும் புகார் கூறப்பட்டது. சாத்தான்குளம் போலீஸ் கான்ஸ்டபிள் மகராஜன், மாஜிஸ்திரேட் பாரதிதாசனை ஒருமையில் விமர்சித்திருக்கிறார். இதனை புகாராக மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுப்பி வைத்தார். இதனால் போலீசார் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்காகவும் பதிவு செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பரபரப்பான உத்தரவை பிறப்பித்தனர்.
போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
அத்துடன் தூத்துக்குடி ஏ.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன் இருவரையும் உடனடியாக பணி இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் ஏ.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிஐக்கு மாற்றம்
முன்னதாக சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது என கொள்கை முடிவு எடுத்த பின் நீதிமன்றத்தில் தெரிவிப்பது ஏன்? சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.;