சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை-மகன் மரண வழக்கு விசாரணை- சி.பி.ஐ. வசம் ஆவணங்கள் ஒப்படைப்பு
சென்னை: சாத்தான்குளம் போலீசாரின் தாக்குதலில் தந்தை, மகன் மரணமடைந்த வழக்கில் இன்று முதல் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ளது. இதற்காக சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி சென்று சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து ஆவணங்களைப் பெற்றனர்.
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி
நீதிமன்றம் அதிருப்தி
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்தது.
சிபிசிஐடி விசாரணை
இதனையடுத்து சிபிஐ விசாரிக்கும் வரை தமிழக அரசின் சிபிசிஐடி போலீசார் இடைக்காலமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியது முதலே பெரும் பரபரப்புதான். இந்த விசாரணையில் முதலில் அதிரடியாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
அடுத்தடுத்து கைதுகள்
பின்னர் மேலும் 5 போலீசாரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 10 போலீசார் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகள் பாய்ந்திருக்கின்றன. பிரண்ட்ஸ் ஆப் போலீஸை சேர்ந்தவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
விசாரணையை தொடங்கிய சிபிஐ
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வருகை தந்தது. சென்னையில் இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சிபிஐ விசாரணையில் மேலும் பலரும் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவணங்கள் ஒப்படைப்பு
சென்னை ஆலோசனையை தொடர்ந்து மதுரைக்கு சென்றுள்ளனர் சிபிஐ அதிகாரிகள். திருச்செந்தூரில் தங்கி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்த இருக்கின்றனர். இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் குழு தூத்துக்குடி சென்றது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.