மதுரையில்.. 150 ஆண்டு பழமையான பள்ளிக் கூடத்தின் கட்டடம் இடிந்தது.. 3 மாணவர்கள் காயம்
மதுரை: மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பால்கனி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள அரசு உதவிபெறும் ஆயிர வைசிய வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டிடம் நீண்டகளாக சிதலமடைந்து காணப்பட்ட நிலையில், இன்று திடீரென பால்கனி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
இதில், பால்கனியில் நடந்து சென்ற 11ம் வகுப்பு மாணவர்கள் சக்திவேல், குமரவேல், வீரக்குமார் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று மாணவர்களுக்கும் தலை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் மூன்று பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தை அடுத்து, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது, மேலும், கட்டிட விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள விளக்குத்தூண் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி கட்டிடம் மிக மோசமாக பழுதடைந்த நிலையில், மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் எப்போது விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது. இதனால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். பழமை வாய்ந்த கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.