மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு!
Recommended Video
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததன் எதிரொலியாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கோவிலுக்கு வருகின்றனர். இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு எப்போதும் பலப்படுத்தப்பட்டே இருக்கும்.
கோவிலின் நான்கு கோபுர வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாகவே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் போலீசாரும் சோதனை செய்த பின்னர்தான் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் துணை ஆணையாளர் கார்த்திக் ஆகியோரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் தலைமையில் போலீசார் கோவிலின் நான்கு கோபுர வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.
இதனால் பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. கோவிலில் ஆடி வீதிகளும் இந்த சோதனை நீடித்தது. இதுபற்றி விசாரித்தபோது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டதாக தகவல் வெளியானது.
மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் 110 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூடுதலாக 370 போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மோப்பநாய் மூலமும் சோதனை நடந்து வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாகவே மீனாட்சி அம்மன் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அனைத்து பகுதிகளிலும் போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கோவில் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.