வேட்பாளர் தேர்வை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பா போல் மிதித்துவிடுவேன்.. சீமான் அதிரடி!
மதுரை: நான் அறிவிக்கும் வேட்பாளர் யாராவது எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
நாம் தமிழர் கட்சிக்கு நான்தான் கட்டளை தளபதி. நான் போட்ட கோட்டிற்குள்தான் நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்க மாட்டேன்.
கிரீஸ் டப்பா
நான் ஓடும் திசையில்தான் நீங்களும் ஓட வேண்டும். நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து யாரும் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது. மீறி யாராவது எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன் என சீமான் கூறியுள்ளார். இது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாகரன் பேச்சு
மேலும் அவர் பேசுகையில் நாம் தமிழர் கட்சி மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதுவரை ஓயமாட்டேன். ஒதுக்கக் கூடிய சமூகத்திற்கு நாம் தமிழர்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறோம். உலகமே என் பேச்சை கேட்கும், ஆனால் நான் பிரபாகரன் பேச்சை தவிர யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என்று கூறினார்.
மூன்றாவது கட்சி
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு என தனி வாக்கு வங்கி உள்ளது. குறிப்பாக தற்போது இருக்கும் இளைஞர்கள் அக்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய மூன்றாவது கட்சியாக நாம் தமிழர் உருவெடுத்தது.
50 சதவீத வாய்ப்பு
இதனால் இந்த கட்சி மீது சட்டசபை தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் சீமான் தனது வேட்பாளர் பட்டியலில் 50 சதவீத இடம் பெண்களுக்கு வழங்கியுள்ளார். இவரது பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வாதிகாரி போல் சீமான் பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.