மதுரை டூ சென்னை.. ஒரு ரயில் நிறைய ஆட்களை கொண்டுவந்து இறக்கிய செல்லூர் ராஜு.. கலங்கி தழுதழுத்த குரல்!
மதுரை: எதையும் வித்தியாசமாக செய்யும் மதுரைக்காரன் பாசக்காரன், ரோசக்காரனோடு மட்டுமின்றி பற்றுகொண்ட கட்சியின் தலைவனுக்கு விசுவாசமாக இருப்பான் என்று கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ஜெயலலிதா நினைவிட திறப்புக்காக, தனி ரயில் புக் செய்து, அதிமுகவினரை சென்னை அழைத்து வந்துள்ளார்.
Recommended Video
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நினைவிட திறப்பு விழாவிற்கு மதுரை மாநகர் கழகம் சார்பாக இரண்டாம் கட்டமாக 18 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலை முழுசாக புக் செய்துவிட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு.
தனி ரயில்
சுமார் 2000க்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் பொதுமக்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அழைத்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு மதுரை ரயில் நிலையத்தில் ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் மற்றும் மேலதாளங்களோடு இரவு 8 மணிக்கு புறப்பட்டது ரயில். சென்னைக்கு இன்று அந்த ரயில் வந்தது. கட்சி விழாவில் கலந்து கொண்ட பின்னர், மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு அதே ரயில் மூலமாக திருப்பி அழைத்து செல்ல உள்ளார்.
உணவு, தண்ணீர் செலவு
ரயிலில் பயணம் செய்யும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் செய்துள்ளார். சிறப்பு ரயிலில் கட்சியினருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜுவும் ரயிலில் புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தார். முன்னதாக மதுரை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது; தமிழக வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் தலைவரின் நிகழ்ச்சிக்கும் இது மாதிரி புகை வண்டியை எடுத்தாக வரலாறு இல்லை.
உலகம் வியக்கும் ஜெ. நினைவிடம்
ஜெ உடல்நலம் பெற்று வர ஆயிரக்கணக்கான மக்கள் காவடி, அலகு குத்தினோம், ஒரு மாதம் தொடர் பிரார்த்தனை செய்தோம். ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லை. ஆனால் ஜெயலலிதா நினைவிடத்தை உலகமே வியக்கும் வண்ணம் முதல்வர் கட்டிக்கொடுத்துள்ளார். மதுரையிலிருந்து பேருந்துகள் மூலமும், தற்போது ரயிலில் மூலமும் 10,000 பேர் வரையில் செல்கிறோம். நானும் பேரன்களோடு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக என்னுடன் வருகிறார்கள்.
தளதளத்த செல்லூர் ராஜு
நான் பொதுவாக இயக்கத்திற்கு ஏற்றுக்கொண்ட கொள்கையை பெரிது என நினப்பவன். நிறம் மாறிய பூக்களாக இருக்கக்கூடாது. ஜெயலலிதாவிற்கு வித்தியாசமாக செய்ய நினைத்தே இதை செய்தேன். தற்போது எனது சொந்த செலவில் ரயிலில் தொண்டர்களை அழைத்துச்செல்கிறேன். இந்த ரயில் பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள். மதுரைக்காரன் எதை செய்தாலும் வித்தியாசமாக செய்பவன். ஆழமாக செய்வான். ஆரோக்கியமாக செய்பவன். தாய் மீது பாசம் கொண்டவன் விசுவாசமாக இருப்பான். மதுரைக்காரன் எப்போதும் அப்படியே இருப்பான் என்று தழுதழுத்த குரலில் பேசினார்.