ராஜஸ்தான் சேட்டுகளுடன் தாண்டி தாண்டி தாண்டியா ஆடி ஹோலி கொண்டாடிய செல்லூர் ராஜூ
Recommended Video
மதுரை: மதுரையில் ஹோலி பண்டிகை கொண்டாடிய ராஜஸ்தான் சேட்டுகளுடன் கோலாட்டம் ஆடினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரையில் அதிமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் போட்டியிடுகிறார்.
மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பாராளுமன்ற வேட்பாளராக யாரை அறிவிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் ஆகிய இரண்டு பேருக்கும் நடுவில் மிகப்பெரிய உட்கட்சிப் பூசல் நடந்து வந்தது.
இந்த நிலையில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா அவர்களின் மகன் ராஜ்சத்யனை மதுரை நாடாளுமன்ற வேட்பாளராகவும், தேனி நாடாளுமன்ற வேட்பாளராக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரரை வேட்பாளராகவும் அதிமுக தலைமை அறிவித்தது.
ராஜ் சத்யனை அதிமுக மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக ராஜ்சத்யனை அறிவித்த நாளிலிருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரை பல்வேறு ஜாதி சங்கத்தினர், அதிமுக கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள் என பல்வேறு முக்கிய நபர்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வாக்குகளை சேகரித்து வந்தார்.
அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தமிழ்வாழ் குடியுரிமை பெற்ற ராஜஸ்தான் மற்றும் வட இந்தியர்களோடு சேர்ந்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக குச்சியை கையில் பிடித்தவாறு மதுரை அதிமுக வேட்பாளரான ராஜ் சத்யனோடு உற்சாகமாக நடனமாடி வாக்கு சேகரித்தார்.