அதை நான் சொல்ல மாட்டேன்... கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுவேன் - செல்லூர் ராஜூ
அதிமுக, அமமுக இணைப்பு பற்றி எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க எல்லாம் கட்சித்தலைமை முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரை : எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுக, அமமுக இணைப்பு பற்றி தன்னிடம் எதுவும் கேட்கக்கூடாது என்று கூறியுள்ள செல்லூர் ராஜூ, கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என்றார். ஜெயலலிதா, எம்ஜிஆர் இருந்த நிலை தற்போது இல்லை. அவர்களை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. நாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே நமக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார்.
உதயசூரியன் சின்னத்தில் 5 இடங்கள்- இதுதான் பைனல்.. ஓகே கேட்கும் திமுக.. விறுவிறு ஆலோசனையில் விசிக
ஆமை வேகத்தில் பணி செய்வது எனக்கு வருத்தமாக உள்ளது. மதுரைக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அடுத்த ஆட்சி நாங்க தான் என்று கூறுகிறார்கள். ஆனால் பல வளர்ச்சி திட்டங்களை நாம் கொடுத்துள்ளேன். நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதை மனதில் வைத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
துரோகியாக மாற வேண்டாம்
நான் எனது தொகுதியை மட்டும் மனதில் வைத்து பணியாற்றவில்லை. நான்கு தொகுதிகளுக்கும் சிறப்பான திட்டங்களை நாம் செய்துள்ளோம். நமது கட்சிக்கு யாரும் துரோகம் செய்யக் கூடாது .அப்படி நீங்கள் செய்தால் துரோகியாகிவிடுவீர்கள். உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது என்று கூறினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
சரத்குமார் பற்றி கவலையில்லை
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டணியிலிருந்து சரத்குமார் போவார், வருவார். அவரைப் பற்றி கவலை இல்லை. அவர் நடிகர் என்ற முறையில் கூட கமலை சந்தித்து இருக்கலாம். நாளைக்கே அவர் மனசு மாறி வரலாம் என்றும் கூறினார்.
அதிமுக அமமுக இணைப்பு
அதிமுக, அமமுக இணையுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ,அமமுக அதிமுக இணைப்பு குறித்த விவகாரங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறினார். இந்த விவகாரத்தில் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படும் தொண்டனாக உள்ளேன் என்றும் தெரிவித்தார்
நகைக்கடன் ரத்து அரசாணை
கூட்டுறவு வங்கிகளில் உள்ள நாகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகவில்லை ஏன்? என்று கேள்வி எழுப்பியதற்கு, பதிலளித்த அமைச்சர், நகைக் கடன் ரத்து குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டு உள்ளார். அது எப்படியாவது நடைமுறைப் படுத்தப்படும். நகைக்கடன் ரத்து செய்ததற்கான அரசாணை குறித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய பின்னர் வெளியாகும் என கூறினார்.