கையில் பிரியாணி தட்டுடன் நடந்து கொண்டிருந்த செல்லூர் ராஜு.. அப்படியே மிரண்டு பார்த்த தொண்டர்கள்
அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுடன் சாப்பிட்டார்
மதுரை: கையில் பிரியாணி தட்டுடன் நடந்து கொண்டிருந்த செல்லூர் ராஜுவை பார்த்ததுமே தொண்டர்கள் அப்படியே மிரண்டு போய் பார்த்தனர்..!
அமைச்சர் செல்லூர் ராஜுவை பொறுத்தவரை கட்சியில் சீனியர்.. எம்ஜிஆர் காலத்தில் இருந்து இருப்பவர்.. கட்சியின் நிறைய நெளிவு சுளிவுகளை அறிந்தவர்.
ஆனாலும், இவர் பேச ஆரம்பித்தால் சர்ச்சையில் போய் முடிந்து விடுகிறது.. எதையும் உள்நோக்கத்தோடு இவருக்கு பேசி பழக்கமில்லை.. மனசில் என்ன நினைக்கிறாரோ, அதை அப்படியே வார்த்தைகளில் கொட்டி விடுவார்.. வெள்ளந்தியும்கூட..!
இவரது செயல்பாடுகளும் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கும்.. கொஞ்சம் கூட கெத்து இருக்காது.. மதுரை காமராஜார் சாலை பகுதியில் ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக கட்சி விழா நடந்தது.. அதில் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.. ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனையும் நடந்தது.. அதில், 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரணியினரும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
ரூட் கிளியர்.. வாசன் ஏன் " அந்த" ட்வீட் போட்டார்.. முந்திக் கொண்டு "க்ரீன் சிக்னல்" காட்டிய தமாகா..!
கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.. இறுதியில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு இரவு பிரியாணி வழங்கப்பட்டது.. அப்போது தொண்டர்கள் அனைவரும் வரிசையில் நின்று கொண்டனர்.. உடனே இதை பார்த்த செல்லூர் ராஜுவும் ஒரு பாக்கு மட்டை தட்டை எடுத்து கொண்டு, வரிசையில் வந்து நின்றார். அவரும் எல்லாருடனும் சேர்ந்து பிரியாணி வாங்கி கொண்டு வந்தார்.. அங்கே தொண்டர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த பகுதிக்கு பிரியாணி தட்டோடு சென்றார்.. அவர்களுடன் நின்று சிரித்துப் பேசியபடி சாப்பிட்டார்...
பிரியாணி தட்டுடன் வந்த அமைச்சருடன் இளைஞர்களும், தொண்டர்களும் செல்ஃபி எடுத்து கொண்டனர்... அப்போது அங்கே வந்த செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு கையில் பிரியாணி தட்டை வைத்து கொண்டே பேசினார்.. "அம்மா பிறந்தநாள் விழா பற்றி ஆலோசனை நடத்தினோம்... தொண்டர்களுக்கு பிரியாணி தந்திருக்கோம்.. நானும் அவங்களோடு சேர்ந்து சாப்பிட்டுட்டு இருக்கேன்.. டேஸ்ட்டா இருக்கு.. நீங்களும் சாப்பிட்டு வாங்க" என்றார்.