கொஞ்சம் தெளிவா பேசுங்க பாஸ்... உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜூ
மதுரை : உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வின் அடுத்த வாரிசு . அரசியலுக்கு தற்போது தான் வந்திருக்கிறார் . ஆகவே எதையும் பேசும் பொழுது நிதானத்துடன் பேசவேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசியலில் பேசக்கூடாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் வாயிலில் உள்ள தமிழன்னை சிலைக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. மாணவர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, வழக்கம் போல் தனக்கே உரிய பாணியில் திமுக.,வை கிண்டல் செய்தும், அதிமுக.,வை புகழ்ந்தும் பேசினார்.
காங்கிரசை காணாமல் ஆக்கிய மாணவர்கள்
அவர் பேசுகையில், காங்கிஸ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என மாணவர்கள் நினைத்ததால் தான் 1967 முதல் காங்கிரசை ஆட்சிக்கு வரவிடாமல் ஒழித்து திராவிட இயக்கங்கள் தான் ஆட்சியில் உள்ளன.
தமிழுக்கு உழைக்கும் கட்சி அதிமுக
தமிழ்மொழி காக்க தமிழுக்காக பல தியாகங்களை செய்த பலருக்கு உதவியது அதிமுக தான்.
தமிழ் மொழிக்காக மாநாடு நடத்தியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. இருவரும் தமிழுக்கு பல்கலைக்கழகம் அமைத்தவர்கள்.
கூட்டணி பேச குழு
மதுரையில் உள்ள பராமரிப்பற்ற சிலைகளை கண்டறிந்து மாநகராட்சி நடவடிக்கை எடுப்பார்கள். எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முதல்வர்- துணைமுதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சொல்லியதை, அதிமுக நிர்வாகிகள் குழு எடுத்துச்செல்லும் என்றார். அதிமுக தான் பாஜகவை தேடி வந்ததாக சிடி ரவி பேசியது குறித்த கேள்விக்கு, பாஜக பொறுப்பாளர் சி டி.ரவி பேசியதற்கு தலைவர்கள் பதில் சொல்வார்கள்.
உதயநிதி பார்த்து பேசனும்
உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தெரியும். நேற்று பெய்த மழையில் முளைத்தவர். உதயநிதிக்கு என்ன அரசியல் பின்புலம் உள்ளது. அவருக்கு அரசை பற்றி என்ன தெரியும். உதயநிதி எதைப் பேசினாலும் தெளிவாக பேச சொல்லுங்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என பேச வேண்டாம். திமுக அடுத்தக்கட்ட தலைவராக உள்ள உதயநிதி புரிந்துகொண்டு பேச வேண்டும்.
மதுரை பக்கமும் வாங்க ஸ்டாலின்
அதிமுக அமைச்சர்கள் நிற்கும் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் நிற்பார்கள் என கூறப்பட்டுள்ள கருத்துக்கு, நிற்கட்டும். நாங்கள் சந்திக்க தயார். திமுகவை தோற்கடிக்க போகிறோம். குடும்ப ஆட்சி- அரசியல் நடத்தும் திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்ப தயாராக உள்ளனர். சென்னையிலேயே சுற்றும் ஸ்டாலினை மதுரை பக்கமும் கொஞ்சம் வரச்சொல்லுங்கள்.
வாக்களிக்க மக்கள் தயார்
கொரானா காலத்தில் முதல்வர் ஊர் ஊராக சென்று கொரானாவை கட்டுப்படுத்தினார். உலகத்திற்கே முன்மாதிரியான நடவடிக்கை எடுத்தார். தற்போது மக்கள் செழிப்பாக உள்ளனர். எப்போ தேர்தல் வரும் என மக்கள் காத்துக்கொண்டுள்ளனர். அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
ஜோசியம் சொல்லும் ஸ்டாலின்
அலங்காநல்லூர் முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமையுமா என்பது குறித்த கேள்விக்கு,இப்போது மக்களை சந்திக்க போகிறோம். திமுக போல ஆருடம் சொல்ல விரும்பவில்லை. ஜோசியம் சொல்ல நாங்கள் ஸ்டாலின் இல்லை. நாங்கள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்கள் தான் எஜமானார்கள்.
மக்களின் பல்ஸ் தெரியும்
மக்கள் வாக்களித்தால் எங்கள் ஆட்சி அமையும். எத்தனையோ தேர்தல்களை நாங்கள் பார்த்துள்ளோம். கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை ஒரே முடிவை தான் மக்கள் எடுப்பார்கள். மக்களின் பல்ஸ் பற்றி தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.