விஜய் என்னங்க விஜய்.. ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான்.. தலையிட மாட்டோம்.. செல்லூர் ராஜூ
மதுரை: நடிகர் விஜய் வீட்டில் மட்டுமில்லை. ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான். தவறு செய்வோர் மீதான நடவடிக்கையில் அதிமுக அரசு தலையிடாது. எங்கள் மீது குறை இருந்தாலும் உடனே சொல்லுங்கள். நாங்கள் திருத்திக் கொள்ள தயார் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
2ஆவது நாளாக சோதனை
நடிகர் விஜய், சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் குழுமம் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகின்றனர். நெய்வேலி என்எல்சியில் ஒரு படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் விஜய் வீட்டில் இன்று 2 ஆவது நாளாக வருமான வரித் துறை இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
எத்தனை கோடி
பிகில் பட வசூலுக்காக மட்டுமே இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அன்புச் செழியன் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. அது போல கணக்கில் வரவு வைக்கப்படாத தங்க நகைகளும் சிக்கியுள்ளன. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. பிகில் படத்தின் வசூல் ரூ 300 கோடியை தாண்டியுள்ளது.
வருமான வரித் துறை
இது தொடர்பாக விசாரிப்பதற்காக வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று ஏஜிஎஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இது மட்டுமல்லாமல் மொத்தம் 38 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அன்புச் செழியன்தான் பிகில் படத்தின் பைனான்சியர் ஆவார். அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விஜய் வீட்டு முன் போலீஸ்
விஜய் வீட்டில் ஐடி ரெய்டு என்ற தகவல் கேட்டு விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அது மட்டுமல்லாமல் மாஸ்டர் படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாலும் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். #WeStandWithVijay என்ற ஹேஷ்டேக்கை டிரென்டிங்கில் வைத்துள்ளனர். மேலும் ரசிகர்கள் விஜய் வீட்டு முன் குவியாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.