அதிமுக கூட்டணில பாஜக தேசிய கட்சிங்க.. அதுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.. செல்லூரார் சர்ச்சை
மதுரை: தேசிய கட்சி என்பதால் பாஜகதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை பழங்காநத்தம் பகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். அவர் கூறுகையில் நாளை நடைபெறும் அதிமுக பிரச்சார பொதுக் கூட்டம் 2021 இல் வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டமாக அமையும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம். தங்கத்தை தோண்டி எடுக்கும் நாடுகளில் கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல முடியுமா?.. வாசகர்கள் சொன்ன பதிலை பாருங்க!.. செம சர்வே!
சட்டசபை தேர்தல்
வழக்கமாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சட்டசபையிலும் எதிரொலிக்கும் என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. 1980களில் நாடாளுமன்றத்தில் அதிமுக இரு இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் சட்டசபை தேர்தலில் அதிமுகதான் ஆட்சியில் அமர்ந்தது. அதே போல்தான் வரும் 2021 தேர்தலிலும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார்.
முதல்வர் வேட்பாளர்
முதல்வர் வேட்பாளரை பாஜகவின் தேசிய தலைமைதான் அறிவிக்கும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு செல்லூர் ராஜூ கூறுகையில் பாஜகவை பொருத்தவரை அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்.
மாநில கட்சிகள்
கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தால் மாநில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும். இது போல் அகில இந்திய கட்சிகள் கூட்டணியில் இருந்தால் முதல்வர் வேட்பாளரை தேசிய கட்சிதான் அறிவிக்கும். மு.க. அழகிரியின் செயல்பாடு மதுரை மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
கருணாநிதி
அழகிரி தான் எடுக்கும் கொள்கையிலிருந்து மாறாதவர். முறையாக திட்டங்களை வகுத்து செயல்படுபவர் அழகிரி. கருணாநிதியிடம் உள்ள அனைத்து திறமைகளும் அழகிரியிடம் உள்ளது. ஆனால் திமுகவோ அழகிரியை புறக்கணிக்கிறது. எதிர்க்கட்சிகளை வளரவிடக் கூடாது என்பதில் கருணாநிதியை போன்று செயல்படுபவர்.
திமுக
எதிர்க்கட்சியாக இருந்த போது அழகிரியால் அதிமுகவினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். அவரிடம் ரவுடிகளாக இருந்தவர்கள் இன்று திமுகவில் உள்ளார்கள். அழகிரியை ஒதுக்கிட்டு திமுக ஆட்சிக்கு வருவது நடக்காத ஒன்று. அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவிற்கு பாதிப்பு நிச்சயம் என்றார் செல்லூர் ராஜூ. ஏற்கெனவே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் மாறுபட்ட கருத்தை முன்வைத்தவர் செல்லூரார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கருத்தும் ஒரு காரணம் என்பதால் செயற்குழு கூட்டம் கூடி எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது.