மதுரைக்காரங்க கஞ்சா கசக்குறது.. அரிவாள் எடுப்பது சினிமாவில்தான்.. நிஜத்தில் பாசக்காரங்க- செல்லூரார்
மதுரை: மதுரைக்காரங்க கஞ்சா கசக்குறது, அரிவாள் எடுப்பது எல்லாம் சினிமாவில்மட்டும்தான், நிஜத்தில் அவர்கள் பாசக்காரர்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வெற்றி நிச்சயம்
அவர் கூறுகையில் விளையாட்டுத் துறையில் 8-ஆம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தோல்வியை கண்டு பயப்படாமல் ஓடினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
பாரம்பரியம்
மாரத்தான் போட்டியில் சிறுவர்- சிறுமிகள் பங்கேற்பதன் மூலம் நட்பு, அன்பு, பாசம், உற்சாகம் மேம்படும். மதுரை மாநகரம், தொன்மை மற்றும் பாரம்பரியமிக்க நகரமாக முன்மாதிரியாக உள்ளது.
பாசம்
சினிமாவில்தான் மதுரைக்காரன் என்றால் கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது போல் சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள், பாசத்திற்காக எதையும் செய்வார்கள் என்றார் செல்லூர் ராஜூ.
சமூகவலைதளங்களில்
மதுரை சிட்னியாக மாறும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தது சமூகவலைதளங்களில் வைரலானது. அது போல் நகைப்பாக பேசுவதில் செல்லூர் ராஜூவுக்கு நிகர் அவர்தான். மதுரையில் எய்ம்ஸ் என்பதற்கு பதில் எய்ட்ஸ் மருத்துவமனை என்று கூறிவிட்டார்.