ப.சிதம்பரம் பணக்கார அரசியல்வாதி..அதான் மக்கள் அவருக்காக கவலைப்படவில்லை.. செல்லூர் ராஜு
மதுரை: ப.சிதம்பரம் பணக்கார அரசியல்வாதி. மேல் மட்டத்திலேயே அரசியல் செய்தவர். அதனாலேயே அவரது கைது தமிழக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் கூறினார்.
மதுரை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துப்பட்டியில் 27.80 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். விழாவில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நீர் நிலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது எனவும் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் குடிமராமரத்து பணி தொடர்பாக தி.மு.க. எம்எல்ஏ சரவணன் கூறி வரும் புகார்கள் உண்மை என தெரிய வந்ததால் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மதுரை மாநகரில் பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவங்கள் நடந்து வருவதை பார்க்கையில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என கூற முடியாது என்றார்.
இருந்தாலும் இளைஞர்கள் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜு. ப.சிதம்பரம் குறித்த கேள்விக்கு, அவர் பணக்கார அரசியல்வாதி. மேல் மட்டத்திலேயே அரசியல் செய்தவர். அதனாலேயே அவரது கைது தமிழக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.