அதிமுகவில் இருக்கும் வரை முடி.. அதை விட்டு விலகினால்.. செல்லூர் ராஜு செம பேச்சு!
Recommended Video
மதுரை: அதிமுகவில் இருக்கும் வரை முடி, அதில் இல்லை என்றால் மயிர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வாழ்க்கையில் முன் ஏறி வந்ததாக சரித்திரம் இல்லை, அதிமுகவை அழிக்க யாராலும் கொடுக்க முடியாது என அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள செல்லூர் கண்மாயை குடிமரமத்து திட்டத்தின் கீழ் 48 இலட்சம் மதிப்பில் தூர் வாரும் பணியினையும், மதுரை வைகையாற்றில் 35 கிலோ மீட்டர் நீளத்துக்கு 3 கோடியே 3 இலட்சம் மதிப்பில் கருவேல மரங்களை அகற்றும் பணியினையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டார்கள், பின்னர் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில் "வைகையை காக்க தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா இல்லா விட்டாலும் ஜெயலலிதாவின் எண்ணங்களின் படி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு நிகரான பேருந்து நிலையங்கள் மதுரையில் அமைக்கப்பட்டு உள்ளது.
மதுரையை நவீனமாக்க பல்வேறு திட்டங்கள் நடைபெறுகிறது. மதுரை இன்னும் 2 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு இணையாக உருவாகும். மதுரையின் தொன்மையை காக்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க மதுரைக்கு சிவபெருமான் வந்ததாக புராணம் செல்கிறது. சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த பெருமையானது வைகை ஆறு. வைகையை காப்பற்ற பாண்டிய மன்னன் எடுத்த நடவடிக்கைகள் போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
தமிழகத்தில் 2017 - 18 ஆம் ஆண்டில் 418 கோடி மதிப்பில் குடிமரமத்து பணிகள் நடைபெற்று உள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டு 500 கோடி மதிப்பில் குடிமரமத்து பணிகள் நடைபெறுகிறது. தமிழக அரசு செயல்படுத்தும் பணிகளை திமுக செய்தது போல சித்தரிக்கப்படுகிறது. தமிழக அரசின் பணிகளை தான் செய்தது போல ஸ்டாலின் போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.
தமிழகத்தில் செயல்படுத்திய மழை நீர் சேகரிக்கும் திட்டத்தை வெற்றிகரமாக இந்தியா முழுதும் செயல்படுத்த பிரதமர் மோடி முன் வந்துள்ளார். பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை எமாற்றி 2021 ல் ஆட்சிக்கு வர நினைக்கிறது திமுக. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்ந்து நடைபெறும்" என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "மதுரை மண்ணின் மகள் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். எந்த துறையிலும் பதவி வகித்தாலும் சிறப்பாக செயல்படுத்த கூடியவர் நிர்மலா சீத்தாராமன். இன்று அல்ல என்றுமே எதிர்கட்சிகள் ஆளும் கட்சியை எதிர்க்க தான் செய்யும். இதற்கு தான் எதிர்க்கட்சி என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவில் இருக்கும் வரை முடி, அதில் இல்லை என்றால் மயிர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வாழ்க்கையில் முன் ஏறி வந்ததாக சரித்திரம் இல்லை, அதிமுகவை அழிக்க யாராலும் கொடுக்க முடியாது" என தெரிவித்தார்.