வைகுண்ட ஏகாதசிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் - எந்த ஏகாதசி விரதத்திற்கு என்ன பலன்
:மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார். அதனால் தான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது.
Recommended Video
மதுரை: இன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டுள்ளது. பெருமாள் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் ஒரு பொழுது மட்டுமே உண்டு, விரதமிருந்து நாள் முழுவதும் கண்விழித்திருந்து, அதிகாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று சொர்க்கவாசல் வழியாக சென்று இறைவனை தரிசிப்பது வழக்கம்.
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தாலும், ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால். வைணவர்கள் அனைவருமே ஒவ்வொரு மாதமும் வரும் இரண்டு ஏகாதசிக்கும் முக்கியத்துவம் அளித்து விரதமும் இருந்து வருகின்றனர். காரணம் ஏகாதசி தினமானது, மோட்சத்தை அளிப்பதற்கு உரிய தினமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
விரதத்திலேயே சிறந்த விரதம் என்று ஏகாதசி விரதத்தை சொல்வார்கள். ஏகாதசி விரதம் மாதத்திற்கு இரண்டு முறை வருவதாகும். ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி தினத்தன்று இருக்கு விரதத்திற்கு ஏற்றவாறு நற்பலன் கிடைக்கும் என்றாலும், அனைத்து ஏகாதசி விரதமும், வைகுண்ட பதவிக்கு வழி வகுக்கும் என்பதே உண்மை. ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயரும், அந்த நாட்களில் இருக்கும் ஏகாதசி விரதத்துக்கு உரிய பலன்களும் கிடைக்கும் என்றாலும், அனைத்து ஏகாதசி நாட்களிலும் இருக்கும் விரதமும், வைகுண்ட பதவிக்கு நம்மை இட்டுச்செல்லம் என்பது நிச்சயம். ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி விரதத்தைப் பற்றியும் அதனால் கிடைக்கும் பலன்களையும் நாம் பார்க்கலாம்.
காமதா, பாப மோகினி
தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரையில், தேய்பிறையில் வரும் ஏகாதசி திதிக்கு பாப மோகினி ஏகாதசி என்று பெயர். வளர்பிறையில் வரும் ஏகாதசி திதிக்கு காமதா ஏகாதசி என்றும் பெயர். இவ்விரண்டு ஏகாதசி நாட்களிலும் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அனைத்தும் கிடைக்கும் என்பது நிச்சயம்.
மோகினி, வருதித் ஏகாதசி
வைகாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு வருதித் ஏகாதசி என்றும் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்றும் பெயர். இந்த இரண்டு ஏகாதசி தினங்களில் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு, இமயலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அபார, நிர்ஜலா
ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு அபார ஏகாதசி என்றும் வளர்பிறை திதியில் வரும் ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்றும் பெயர். இந்த நாட்களில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
யோகினி, சயனி
ஆடி மாத தேய்பிறை திதியில் வரும் ஏகாதசிக்கு யோகினி ஏகாதசி என்றும் வளர்பிறை நாளில் வரும் ஏகாதசிக்கு சயனி ஏகாதசி என்றும் பெயர். மேற்கண்ட இரண்டு ஏகாதசி திதிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு, தானத்தில் சிறந்ததாக கருதப்படும் அன்னதானம் வழங்கிய புண்ணியம் கிடைக்கும்.
ஆவணி தேய்பிறை திதியில் வருகின்ற ஏகாதசியை காமிகா ஏகாதசி வளர்பிறை திதியில் வருகின்ற ஏகாதசியை புத்ரஜா ஏகாதசி என்றும் சொல்கிறோம். இவ்விரு ஏகாதசி நாட்களிலும் தவறாமல் விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிறைந்த சந்தான பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
அஜா, பத்மநாபா
பெருமாளுக்கு பிடித்தமான புரட்டாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு அஜா ஏகாதசி என்றும் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு பத்மநாபா ஏகாதசி என்றும் பெயர். இவ்விரண்டு ஏகாதசி நாட்களிலும் விரதம் இருந்தால், குடும்பத்திதல் என்றென்றும் ஒற்றுமையும் நிம்மதியும் நிலைத்து நிற்கும்.
இந்திரா, பாபாங்குசா
ஐப்பசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு இந்திரா ஏகாதசி என்றும் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு பாபாங்குசா ஏகாதசி என்றும் பெயர். இந்த இரண்டு ஏகாதசி நாட்களிலும் விரதம் இருந்தால், வறுமை நீங்கி, நம்மைப் பிடித்திருந்த நோய் அகன்று பசிப்பிணி தீர்ந்து, நிம்மதி நிலைக்கும் என்பதோடு, தீர்த்த யாத்திரை சென்றுவந்த புண்ணியமும் கிட்டும்.
ரமா, பிரபோதின
கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்றும் வளர்பிறை ஏகாதசிக்கு பிரபோதின ஏகாதசி என்றும் பெயர். இந்த இரண்டு ஏகாதசி நாட்களிலும் விரதம் இருப்பவர்களுக்கு, பெருமாளுக்கு பழங்களைக் கொண்டு நைவேத்தியம் செய்வதால் கிடைக்கும் மங்கல வாழ்வும், இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும் புண்ணியமும் கிடைக்கப்பெறுவார்கள்.
உத்பத்தி, வைகுண்ட ஏகாதசி
மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார். அதனால் தான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு உத்பத்தி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் மோட்சம் கிட்டும். வளர்பிறையில் வருகின்ற ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று குறிப்பிடுகிறோம். இந்த தினத்தில் நாம் விரதம் இருந்தால் நேரடியாக வைகுண்ட பதவியை அடையலாம் என்பது ஐதீகம்.
சுபலா, புத்ரதா
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வது போல், இந்த மாத தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு சுபலா ஏகாதசி என்றும் வளர்பிறை திதியன்று வரும் ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்றும் பெயர். இவ்விரண்டு ஏகாதசி நாட்களிலும விரதம் அனுஷ்டித்தால் புத்திர பாக்கியம் கிடைப்பதோடு, நமக்கு ஒளிமயமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
ஷட்திலா, ஜெயா
மாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஷட்திலா ஏகாதசி என்றும் வளர்பிறை நாளில் வரும் ஏகாதசிக்கு ஜெயா ஏகாதசி என்றும் பெயர். இவ்விரண்டு ஏகாதிசி நாட்களிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்களின் மூதாதையர்கள் அனைவருக்கும் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
விஜயா, ஆமலகி
வருட கடைசி மாதமான பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்றும் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆமலகி ஏகாதசி என்றும் பெயர். இதில் தேய்பிறை ஏகாதசி நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து, மஹாவிஷ்ணுவை வணங்கினால் கடல் கடந்து சென்று வெற்றிக்கொடி நாட்டலாம்.
வளர்பிறை ஏகாதசியான ஆமலகி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிட்டும். கூடுதலாக வரும் ஏகாதசி தினத்தை 'கமலா ஏகாதசி' என்று அழைப்பார்கள். அன்றைய தினத்தில் செல்வ வளம் அளிக்கும் மஹாலட்சுமியை வழிபட்டால் மங்காத செல்வம் கிடைக்கும்.