கொரோனா பரவும் அபாயகரமான பகுதியாக மாறிய தென் மாவட்டங்கள்.. தீவிர ஆக்சனில் தமிழக அரசு
மதுரை: கொரோனா வைரஸ் தொற்று தென்மாவட்டங்களில் 95 பேருக்கு ஏற்பட்டுள்ளது. மிக அதிகபட்சமாக திருநெல்வேலியில் 29 பேருக்கும் அதற்கு அடுத்தபடியாக தேனியில் 20 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 167 பேருக்கு பரவி உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக அதிகமாக உள்ளது. இங்கு மொத்தம் 7 மாவட்டங்களில் 95 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிக அதிகபட்சமாக திருநெல்வேலியில் 29 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தேனியில் 20 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 17 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும், கன்னியாகுமரி 5 பேருக்கும், சிவகங்கையில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும், விருதுநகரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சில நொடிகள், 1 லட்சம் துளிகள்.. கொரோனா வேகமாக பரவும் ரகசியம் இதுதான்.. ஜப்பான் விஞ்ஞானிகள் அதிரடி!
வதந்தியால் ஒருவர் சாவு
தென் மாவட்டங்களில் முக்கியமான நகரான மதுரையில் 54 வயதான ஒருவர் தான் முதன் முதலாக தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபர் ஆவார். இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுதவிர டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட தற்போது 15 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா இருப்பதாக வதந்தி பரவியதால் அண்மையில் ஒருவர் மதுரையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
நேற்று மட்டும் 9 பேருக்கு
மதுரை நகரிலும், மேலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்ற 28 பேர் கண்டறியப்பட்டனர். இதில் மேலூர் பகுதியில் இருந்து மட்டுமே 9 பேர் சென்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் இருந்து சென்றவர்களில் 12 பேர் மதுரை அரசு மருத்துவமனயிலும், 16 பேர் மதுரை தோப்பூரில் உள்ள மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவரது ரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களது வீடுகளில் இருப்போர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஊர், குடியிருப்பு பகுதிகள் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது. இந்த 28 பேரில் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் கொரோனா பாதிப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.
சீல் வைக்கப்பட்ட பகுதிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 73 பேர் கண்டறியப்பட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் 17 பேரின் வீடுகள், சென்ற இடங்கள் கண்டறியப்பட்டு அனைத்தும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் பேகம்பூர் பகுதியில் நத்தர்சா தெரு, மக்கான் தெரு, பூச்சி நாயக்கன்பட்டி மற்றும் ரவுண்டோடு ராம்நகர், பிஸ்மி நகர், தோமையார்புரம், நிலக்கோட்டையில் கோடாங்கிநாயகன்பட்டி, ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி, மாணிக்கம்பிள்ளை பேட்டை ஆகிய 9 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகள் நேற்று இரவு முதல் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
14 பேர் கண்காணிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் 14 பேர் கண்டறியப்பட்டு விருதுநகர் அரசுமருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு அனுப்பபட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு தடமறிதல் தீவிரம்
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் பகுதியைச் சேர்ந்த 30 தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று உறுதியான 20 பேர், கடந்த நாள்களில் எங்கெல்லாம் சென்றிருக்கிறார்கள், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என தகவல் சேகரிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. இதனிடையே, துணை முதல்வர் ஓபிஎஸ், தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து இன்றுஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேனி புதிய பேருந்து நிலையத்தில் "வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள்" திட்டத்தை அவர் துவக்கி வைத்துள்ளார்.
31 பேர் கண்காணிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 31 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ராமநாதபுரத்தில் பரமக்குடி, ஆர்எஸ் மங்கலம் உள்ளிட்ட பகுதியல் இருந்து 28 பேர் கண்டறியப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
நேற்று மட்டும் 22
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களில் சேர்த்து 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்தத 22ம் தேதி ராதாபுரத்தைச் சேர்ந்த 43 வயது நபருக்கு கொரோனா இருப்பது முதலில் உறுதிசெய்யப்பட்டது. அதன்பின்னர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நேற்று முன்தினம் 22 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
குமரியில் 5 பேருக்கு பாதிப்பு
இந்நிலையில் நெல்லை மருத்துவமனையில் நேற்றும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு ரத்த மாதிரி சோதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் திருநெல்வேலியில் 29 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. தூத்துக்குடியில் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் எங்கு சென்றார்கள். யார் யாரை பார்த்தார்கள் என்பது குறித்து ரூட் மேப் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கொரோனா பரவும் அபாயகரமான பகுதியாக தென்மாவட்டங்கள் மாறி உள்ள நிலையில் அரசு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.