அரியவகை லிஸ்ட்டில் இணைந்துவிட்டதா நம்ம அயிரை மீன்கள்... குழம்புக்காக வலைவீசும் தென்தமிழகம்
மதுரை: கொரோனா காலம்தான் என்றில்லை.. கடந்த சில ஆண்டுகளாக தென் தமிழகத்தில் அயிரை மீன் என்பது அரியவகை பொருளாகிப் போய்விட்டது.
மீன் என்றாலே முள் இருக்கும்.. பார்த்து சாப்பிடனும். என்பார்கள்.. ஆனால் அயிரை மீன் அப்படி இல்லை.. சுண்டுவிரல் அளவு கூட இருக்காது.. அப்படியே குழம்போடு கொட்டி சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால் அடடேதான்!
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் திசையெங்கும் அயிரை மீன் குழம்பு கிடைக்கும் என்பதை கடந்த காலங்களில் ஹோட்டல்களில் பார்த்திருக்கலாம்..சில ஆண்டுகளாக இந்த அயிரை மீன் குழம்பே அருகிப் போனதாகிவிட்டது.
சின்னக்கண்ணன் அழைக்கிறான்... களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி - வீட்டிற்குள் வந்த கண்ணன்கள்
சென்னையில் அயிரை மீன்கள்
அயிரை மீன் குழம்புக்காகவே சென்னை நகரில் திருவல்லிக்கேணி சாரதா மெஸ்ஸில் அலைமோதிய கூட்டம் உண்டு (இப்போது தியாகராயர் நகருக்கு மாறிவிட்டது). சென்னையில் கிளையை திறந்த மதுரை அருளானந்தா ஹோட்டலும் சில காலம் அயிரை மீன்குழம்பில் கெத்து காட்டியது.
மதுரை டூ சென்னை அயிரை பயணம்
சென்னை ஹோட்டல்களுக்கு மதுரையில் இருந்துதான் அயிரை மீன்கள் சப்ளையாகும். மதுரையில் இரவில் புறப்படும் தனியார் பேருந்தில் பெரிய தேக்சாவில் அயிரை மீன்களை பாலில் மிதக்கவிட்டு சென்னைக்கு அனுப்பி வைப்பர். சென்னை வந்து சேர்ந்ததும் அயிரை மீன்களை சுத்தப்படுத்தி மதிய குழம்புக்கு தயார்படுத்திவிடுவர். சூடான சாதத்துடன் கப் அயிரை மீன் குழம்பை குழைத்து அடித்தால் அதுதான் உச்ச ருசி.
அயிரை மீன்களுக்கு என்ன ஆச்சு?
ஒருகட்டத்தில் வறட்சி ஏற்பட்டது.. ஆறுகளில் நீர் வரத்து இல்லை..அதனால் அயிரை சப்ளை இல்லாமல் போனது.. ஆனால் இப்போது எல்லாம் மழையும் பெய்கிறது.. ஆறுகளில் நீர்வரத்தும் ஓடுகிறது.. ஆனால் அயிரை மீன்கள்தான் என்னாச்சு என தெரியவில்லை. திண்டுக்கல்லில் சுமாட்டோ, ஸ்விக்கி போல் ஹோட்டல்களில் இருந்து உணவு பொருட்களை வீடுகளுக்கு சப்ளை செய்யும் தூக்குசட்டி நிறுவனத்தின் உரிமையாளர் பாண்டியனிடம் நாம் இதுபற்றி பேசி கொண்டிருந்தோம்..
3 ஆண்டுகளில் நிலைமை மாற்றம்
கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் பாண்டியன்... அவரிடம் அயிரை மீன் குழம்பு பற்றி விசாரித்த போது, 3 ஆண்டுகளுக்கு முன்னர் அயிரை மீன்குழம்பு பரவலாக கிடைத்தது. மழைகாலத்தில் அயிரை மீன் குழம்பு ஆர்டர் குவிந்தது. ஆனால் இப்போது அப்படியெல்லாம் நிலைமை இல்லை.
காணாமலே போகிறது அயிரை?
ஆனால் அயிரை மீன்குழம்பு கிடைக்கிறதா? என்கிற என்கொயரி தொடர்ந்து வருகிறது. ஹோட்டல்களும் கூட 1 கிலோ அயிரை மீனை ரூ1,000க்கு வாங்கவும் தயாராக இருக்காங்க.. ஆனால் வரத்துதான் இல்லாமல் போனது என்கிறார். அதுவும் இப்போது கொரோனா லாக்டவுன் காலம்வேறு.. ஏற்கனவே அயிரை மீன் அருகிப் போன நிலையில் ஹோட்டல்களில் காணாமலேயே போய்கொண்டிருக்கிறது அயிரை மீன் அயிட்டம்.