என்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்!
மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை: மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. கொந்தளித்துப் போய் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர் மக்கள்.
தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விளம்பர பேனருடன் இணைத்து வைக்கப்பட்டிருந்த பேனர்தான் சர்ச்சைக்கு முக்கிய காரணம்.
அதாவது மதுரை விமான நிலையத்தின்பேகேஜ் பகுதியில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதையொட்டி இன்னொரு பேனர் இடம் பெற்றுள்ளது. அதில் இந்த தீபாவளியை பட்டாசு இல்லாமல் கொண்டாடுங்கள். மாசில்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம் என வாசகம் இடம் பெற்றுள்ளது.
இதுதான் பரபரப்புக்குக் காரணம். மதுரையிலிருந்து ஜஸ்ட் 70 கிலோமீட்டர் தூரம்தான் குட்டி ஜப்பான் எனப்படும் பட்டாசு நகரமான சிவகாசி. இப்படிப்பட்ட ஊருக்கு அருகில் உள்ள விமான நிலையத்தில் பட்டாசு வெடிக்காதீங்கன்னு பேனர் வைத்தால் எப்படி என்று பலரும் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனராம்.
ஆனால் இதை ஸ்பைஸ்ஜெட் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், இதை நாங்கள் வைக்கவில்லை. இதற்கு மதுரை விமான நிலைய அதிகாரிகள்தான் காரணம். எங்களுக்குத் தெரியாமல் அவர்கள்தான் எங்களது பேனருக்கு அருகில் வைத்துள்ளனர். தற்போது அதை எடுத்து விட்டனர். இந்த சம்பவத்திற்கு ஸ்பைஸ்ஜெட் காரணம் அல்ல. எங்களை இதில் இணைத்து விமர்சனங்கள் கிளம்பியது வருத்தத்திற்குரியது என்று விளக்கியுள்ளனர்.
இந்த புகைப்படம் வெளியானதுமே சிவகாசியைச் சேர்ந்த காக் பிராண்ட் பட்டாசு நிறுவனத்தார் கொந்தளித்து கருத்து வெளியிட்டிருந்தனர். மாசில்லாத விமானங்களை நாம் பயன்படுத்தலாமா.. பட்டாசுத் தொழில் குறித்து நீங்க எப்படிப் பேசலாம். உங்களது விமானங்களை கொண்டு போய் குப்பையில் போடுறங்கள்.. பிறகு வந்து எங்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் என்று கூறியிருந்தனர்.
இத்தனை குழப்பத்துக்கும் மதுரை விமான நிலைய அதிகாரிகள்தான் காரணம் என்று விமான நிலைய இயக்குநர் விவி ராவ் ஒப்புக் கொண்டுள்ளார். தவறுதலாக இந்த பேனர் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பேனருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டு விட்டது. இப்போது அதை எடுத்து விட்டோம் என்று கூறியுள்ளார் ராவ்.
நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை.